தமிழகத்துக்கு தண்ணீரா?: நடிகர் அம்பரீஷ் எதிர்ப்பு
பெங்களூர்:
தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் வழங்க கன்னட நடிகரும் காங்கிரஸ் எம்.பியுமான அம்பரீஷ் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினியால் தமிழில் சில படங்களில் தலைகாட்டியவர் அம்பரீஷ். தமிழில் நிலைக்க முடியாததால் கன்னட திரையுலகுக்கே திரும்பியவர்.
காங்கிரஸ் எம்.பியாக உள்ள அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
கடந்த நான்காண்டுகளாகவே காவிரி டெல்டாவில் போதிய மழை பெய்யவில்லை. இதனால் கர்நாடக விவசாயிகள் முடக்கிப் போயுள்ளனர். வறட்சியின் பிடியில் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று சொல்வது முறையல்ல.
இப்போது தான் காவிரி டெல்டாவில் மழை பெய்கிறது. இருந்தாலும் கர்நாடகத்தின் தேவை பூர்த்தியாகவில்லை. இந் நிலையில் கர்நாடக விவசாயிகளின் நலனை கவனிக்காமல் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவதை அனுமதிக்க மாட்டோம்.
நமக்குப் போக மிச்சம் இருந்தால் தான் தமிழ்நாட்டுக்குத் தர வேண்டும். இதை முதல்வர் தரம்சிங்கையும் சந்தித்துக் கூறியுள்ளேன்.
மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த எம்.பி என்ற முறையில் எனக்கு காவிரி விவகாரத்தில் முக்கிய பொறுப்பு உள்ளது. அந்தப் பொறுப்பை நிறைவேற்றுவேன். கே.ஆர்.எஸ். அணையில் மூன்றில் ஒரு பாகம் நிரம்பாமல் உள்ளது.
இதனால் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க சம்மதிக்கக் கூடாது என்றார் அம்பரீஷ்.












Click it and Unblock the Notifications