இலங்கை நாடாளுமன்றத்தில் அடிதடி: எம்.பிக்கள் காயம்
கொழும்பு:
கொழும்பு நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள் இடையே இன்று அடிதடி மூண்டது. புத்தத் துறவிகளான இரு எம்.பிக்களை அதிபர் சந்திரிகாவின் ஆளும் கட்சி எம்.பிக்கள் தாக்கினர்.
இந்த அமளியின்போது நாடாளுமன்றத்தின் பாரம்பரிய அடையாளச் சின்னமான செங்கோல் மாயமானது. பின்னர் அது நாடாளுமன்றத்துக்கு வெளியே வராண்டாவில் கண்டெடுக்கப்பட்டது.
அடிதடியில் காயமடைந்த இரு புத்த துறவி எம்.பிக்களும் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் அவைக்குள் இப்படிப்பட்ட அமளி-துமளி நடந்தது இதுவே முதல் முறையாகும்.
தேசிய பாரம்பரிய கட்சியைச் சேர்ந்த கதலுவே ரத்னசீகவுக்குப் பதிலாக அக் கட்சியைச் சேர்ந்த அக்மீமன தயாரத்னே எம்.பி.யாக இன்று பதவியேற்க வந்தார். அதிபரின் கட்சியுடனான உறவை தேசிய பாரம்பரிய கட்சி முறித்துக் கொண்டுள்ளது. இதற்கு தயாரத்னே தான் காரணம் என ஆளும் கட்சி கருதுகிறது.
இதனால் தயாரத்னே மீது கோபத்தில் இருந்த ஆளும் கட்சியின் எம்.பிக்கள், அவரை பதவியேற்க விடாமல் தடுத்தனர். இதையடுத்து அமளி ஏற்பட்டது.
அதையும் மீறி சபநாயகர் அவரை பதவியேற்க அழைக்கவே, பிரச்சனை அதிகரித்து. பதவிப் பிரமாணம் ஏற்றுக் கொண்டிருந்த தயாரத்னேவை ஆளும் கட்சி எம்.பிக்கள் சூழ்ந்து கொண்டனர்.
இதையடுத்து எதிர்க் கட்சி எம்.பிக்களும் அங்கு கூடினர். இதனால், இரு தரப்பிலும் கூச்சல்- தள்ளுமுள்ளு நடந்தது. அப்போது அவையில் செங்கோல் திடீரென காணாமல் போனது.
உறுப்பினர் பதவியேற்கும்போது செங்கோல் இருப்பது மரபு என்பதால், அதைக் கொண்டு வந்து வைக்குமாறு சபாநாயகர் பலமுறை கோரிக்கை வைத்தார். ஆனாலும் செங்கோலை எடுத்த எம்.பி. அதைத் தரவில்லை.
இதனால் செங்கோல் இல்லாமலேயே தயாரத்னேவும் அவரது கட்சியைச் சேர்ந்த கொலன்னவே சுமங்கலாவும் எம்.பிக்களாகப் பதவியேற்றனர்.
அப்போது நடந்த தள்ளு, முள்ளு கலாட்டாவில் இந்த இருவரும் காயமடைந்தனர். அவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அமளி ஓய்ந்தபிறகு செங்கோல் நாடாளுமன்ற வராண்டாவில் கிடந்தது












Click it and Unblock the Notifications