அதிமுகவை சரித்திரம் மன்னிக்காது: ராமதாஸ்
சென்னை:
காவிரி நதி நீர் விஷயத்தில் அனைத்துக் கட்சிகளுடன் ஒத்துழைக்கத் தவறினால், அதிமுகவை சரித்திரம் மன்னிக்காது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காவிரி பிரச்சனையில் அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டியே முதல்வர் ஜெயலலிதா அனைத்து நடவடிக்கையையும் எடுத்தார் என்று அமைச்சர் பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார்.
கர்நாடக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வதற்கு முன்னர் அனைத்துக் கட்சிகளின் கூட்டம் கூட்டப்பட்டதா? மத்திய அரசு நியமித்த காவிரி நதி நீர் ஆணையத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கையொட்டி ஆணையத்தைப் பற்றியும் பிரதமரை பற்றியும் ஜெயலலிதா கடுமையான கருத்துக்களை வெளியிட்டார். பின்னர் உச்ச நீதிமன்றத்தின் கடுமையான கண்டனத்திற்கு ஆளாகி சொன்னதை வாபஸ் பெற்றுக்கொண்டார்.
இரு மாநில முதல்வர்களும் கடிதங்கள் மூலம் மோதல் நடத்தினர். இதனால் தான் காவிரி நதி நீர் ஆணையத்தை திட்டமிட்டப்படி கூட்ட முடியவில்லை என்று உச்ச நீதிமன்றமே கூறியது.
ஆணையம் வேண்டாம், அதை திருத்தி அமைக்கப்படவேண்டும் என்று அதிமுக வாதிடுவதற்கு காரணம், அது முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட அமைப்பு என்பதேயாகும்.
ஆனால் அதனை தமிழக மக்களின் கருத்து என்று தெரிவிப்பது தவறு. தமிழகத்தின் கருத்து என்று தெரிவிப்பதற்கு முன் அனைத்து கட்சிகளின் கூட்டத்தை கூட்டி விவாதித்திருக்க வேண்டாமா?
அதிமுக அரசின் இத்தகைய நடவடிக்கைகளினால்தான் நிலைமை சிக்கலாகிவிட்டது.
எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழகத்தின் குரல் இப்போது டெல்லியில் ஓங்கி ஒலிக்க தொடங்கியிருக்கிறது. இத்தகைய சூழ்நிலையை பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டால் அதிமுகவை சரித்திரம் மன்னிக்காது என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications