ராஜ்யசபா தேர்தல்: அதிமுக சார்பில் தினகரன், மலைச்சாமி
சென்னை:
தமிழக மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பெயர்களை முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
28ம் தேதி தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் அதிமுக சார்பில் 4 பேரும், திமுக கூட்டணி சார்பில் 2 பேரும் தேர்வு செய்யப்படுவர்.
அதிமுக சார்பில் போட்டியிடும் 4 வேட்பாளர்களின் பெயர்களையும் முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டி.டி.வி.தினகரன், கே.மலைச்சாமி, எஸ்.அன்பழகன், என்.ஆர்.கோவிந்தராஜர் ஆகியோர் அதிமுக சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவர் என்று தெரிவித்துள்ளார்.
இவர்களில் தினகரன், கோவிந்தராஜர், எஸ்.அன்பழகன் ஆகியோர் சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் முறையே பெரியகுளம், கோபிச்செட்டிப்பாளையம், ராசிபுரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தவர்கள். மலைச்சாமிக்கு மக்களவைத் தேர்தலில் சீட் கொடுக்கப்படவில்லை.