எம்.பி, எம்.எல்.ஏக்களை எழுந்து நின்று வரவேற்க அதிகாரிகளுக்கு உத்தரவு
சென்னை:
எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் அதிகாரிகளை சந்திக்க வரும்போது அவர்களை எழுந்து நின்று வரவேற்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் தோல்விக்கு அதிமுக நிர்வாகிகள், எம்.எல்.ஏக்களுடன் சரியாக ஒத்துழைக்காத அதிகாரிகளும் ஒரு காரணம் என்று புகார் கூறப்பட்டுள்ளது.
அதிமுகவினரின் சிபாரிசுகளை அதிகாரிகள் மதிப்பதில்லை, இதனால் கட்சியினர் சரியாக தேர்தல் வேலை பார்க்கவில்லை என்று பரவலான புகாரும், தங்களைக் கூட அதிகாரிகள் மதிப்பதில்லை என்று எம்.பி., எம்.எல்.ஏக்களும் அதிமுக தலைமையிடம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து மாநில பணியாளர் நிர்வாகத்துறை அதிகாரிகளுக்கு பல புதிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
அதில் முக்கிய அம்சங்கள் வருமாறு:
* எம்.பி, எம்.எல்.ஏக்கள் வரும்போது அவர்களுக்கு உரிய மரியாதை தர
வேண்டும். அவர்களை எழுந்து நின்று வரவேற்க வேண்டும், கிளம்பும்போது
எழுந்து நின்று அனுப்பி வைக்க வேண்டும்.
* மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கைகளை கவனமாகப் பரிசீலித்து,
நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* எம்.பி, எம்.எல்.ஏக்கள் தங்களது மக்கள் நலப் பணிகளை நிறைவேற்ற
அதிகாரிகள் முடிந்தவரை ஒத்துழைப்பு தர வேண்டும். முடியாத பட்சத்தில்
அதற்கான காரணத்தை அந்த உறுப்பினருக்குத் தெரிவிக்க வேண்டும்.
* முன் கூட்டியே நேரம் பெறாமல் வந்தாலும் எம்.பி., எம்.எல்.ஏக்களை
அதிகாரிகள் சந்திக்க வேண்டும்.
* அரசு நிகழ்ச்சிகளில் எம்.பி., எம்.எல்.ஏக்கள் அமர்வதற்கான இடங்களை
அதிகாரிகள் சரியாக ஒதுக்க வேண்டும்.
* அவர்களது கடிதங்களுக்கு இரு வாரங்களுக்குள் பதில் அனுப்ப வேண்டும்.
* தங்கள் சொந்தப் பிரச்சனைகளுடன் (டிரான்ஸ்வர், பதவி உயர்வு) போய்
எம்.பி, எம்.எல்.ஏக்களை அதிகாரிகள் அணுகக் கூடாது.
இவ்வாறு பல விஷயங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications