போனஸ் பேச்சு தொடங்க அரசுக்கு சி.ஐ.டி.யூ. கோரிக்கை
சென்னை:
போக்குவரத்து, கூட்டுறவு மற்றும் மின் வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறை ஊழியர்களுக்கான போனஸ், ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தையை தமிழக அரசு உடனடியாக தொடங்க வேண்டும் என சி.ஐ.டி.யூ கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த ஆண்டு இந்த விவகாரங்களை வைத்து வேலை நிறுத்தத்தில் இறங்கிய லட்சக்கணக்கான ஊழியர்களை டிஸ்மிஸ், சஸ்பெண்ட், பதவி குறைப்பு, இடமாற்றம் என சரமாரியாக தண்டித்தது தமிழக அரசு.
இந் நிலையில் சிஐடியு மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவரும் எம்.எல்.ஏவுமான ஹேமச்சந்திரன் தலைமையில் சென்னையில் நடந்தது. கூட்டத்திற்குப் பின் பொதுச் செயலாளர் செளந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
கடந்த 3 ஆண்டுகளாக ரூ. 1,500 கோடி அளவுக்கு போனஸ் உள்ளிட்ட தொகைகள் நலுவையில் உள்ளன. இவற்றை உடனடியாக அரசு வழங்க வேண்டும்.
மின்வாரியம், போக்குவரத்து, கூட்டுறவு உள்ளிட்ட அனைத்துத் துறைகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய போனஸ், ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தையை உடனடியாக தமிழக அரசு தொடங்க வேண்டும் என்றார்.
ஜூலை 2ம் கோரிக்கை நாள்:
இதற்கிடையே, வேலை நிறுத்த உரிமையை சட்டமாக்கக் கோரி ஜூலை 2ம் தேதியை கோரிக்கை நாளாகக் கடைப்பிடிக்கப் போவதாக அரசு ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.
அன்றைய தினம், தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களையும், எம்.பிக்களையும் நேரில் சந்தித்து இந்தக் கோரிக்கையை வலியுறுத்தவும், மனு கொடுக்கவும் ஜாக்டோ ஜியோ முடிவு செய்துள்ளது.
மேலும் அரசு ஊழியர்களின் பல கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அன்றைய தினம் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து மனு அளிக்கவும் முடிலு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications