சுடுகாட்டு ஊழல்: மாஜி அமைச்சர்களுக்கு கிடுக்கிப்பிடி
சென்னை:
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் சுடுகாட்டு கூரை அமைப்பதில் நடந்த ஊழல் தொடர்பான வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர்கள் செல்வகணபதி, ஈஸ்வரமூர்த்தி ஆகியோரை விடுவிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
தமிழகம் முழுவதும் சுடுகாடுகளுக்கு கூரை அமைப்பதில் பெருமளவில் ஊழல் நடந்ததாக அப்போதைய அமைச்சர்களான செல்வகணபதி, ஈஸ்வரமூர்த்தி, 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்ளிட்ட 17 பேர் மீது சிபிஐ வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்குகள் சென்னை, மதுரை சிபிஐ தனி நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு வருகின்றன.
இந் நிலையில் தங்களை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி 2 முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 17 பேரும் சிபிஐ நீதிமன்றங்களில் மனு செய்தனர். ஆனால், அந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டு விட்டன.
இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அனைவரும் மேல் முறையீடு செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி அசோக்குமார், ஐ.ஏ.எஸ். அதிகாரி சம்பத் (முன்னாள் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர்) மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லாததால் அவரை மட்டும் வழக்கிலிருந்து விடுவித்தார்.
அதே நேரத்தில், செல்வகணபதி, ஈஸ்வரமூர்த்தி, 2 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட மற்ற 16 பேர் மீதான குற்றச்சாட்டுகளுக்கும் போதிய ஆதாரங்கள், சாட்சியங்கள் இருப்பதால் அவர்களை வழக்கிலிருந்து விடுவிக்க முடியாது என்று அறிவித்தார்.
அவர்கள் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications