நிவாரண நிதி: பாஜகவுக்கு வாசன் பதிலடி
டெல்லி - சென்னை:
கும்பகோணம் தீ விபத்திற்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து உதவி செய்ய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு உரிமையில்லை என்று பாஜக கண்டனம் தெரிவித்தது. இதற்கு வாசன் பதிலடி கொடுத்துள்ளார்.
கும்பகோணம் தீ விபத்து நடந்த பகுதியை பார்வையிட்ட சோனியா, பலியான குழந்தைகளின் குடும்பத்தினருக்குபிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூபாய் ஒரு கோடியும், அப்பகுதி பள்ளிகளில் கூரைக் கொட்டகைகளை மாற்றரூபாய் 25 லட்சமும் வழங்கப்படும் என அறிவித்தார்.
இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் மல்கோத்ரா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கும்பகோணம் தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சோனியா ஆறுதல் சொல்வது சரியே. ஆனால், பிரதமர்நிவாரண நிதியில் இருந்து ரூ. 1கோடியும், தேசிய குழந்தைகள் நல நிதியில் இருந்து ரூ. 25 லட்சமும் வழங்கப்படும்என்று அறிவிக்க அவருக்கு உரிமையில்லை.
பிரதமர் நிவாரண நிதி அறிவிப்பை பிரதமரும், மத்திய அமைச்சர்களும் அறிவிக்கலாம். ஆனால், ஒரு கட்சிதலைவர் இதை அறிவிப்பதற்கு எவ்வித முன்னுதாரணமும் இல்லை. அவர் தனது கட்சி நிவாரண நிதியைவேண்டுமானால் வழங்கலாம். இது ஆளும் கட்சி மற்றும் அரசின் ஆணவப் போக்கைத்தான் காட்டுகிறது. மத்தியஅரசில் பங்கேற்காமல் அதன் அதிகாரங்களை சோனியா கையாளுகிறார். இதன் மூலம் சோனியா "சூப்பர் பிரதமர்என்பது புரிகிறது.
பிரதமர் மன்மோகன் சிங்கின் விருப்பப்படி சோனியா இதை அறிவிப்பதாகக் கூறினால், பிரதமர் பதவியின்மாண்பை மன்மோகன் சிங் சீர்குலைத்து விட்டார் என்றே அர்த்தமாகும் என்று மல்கோத்ரா கூறினார்.
இதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பதில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பிரதமர் மன்மோகன்சிங் அறிவுறுத்தலின்பேரில் சோனியா காந்தி நிவாரணத்தொகை அறிவித்தது முழுக்க முழுக்கமனிதாபிமான அடிப்படையிலான செயலாகும். இதை அரசியலாக்க பாஜக முயல்வது கடைந்தெடுத்த சுயநலமிக்கசெயலாகும்.
உரிய நேரத்தில் அவர்களுக்கு நிவாரணம் போய்ச் சேருகிறதா என்பதை விட்டுவிட்டு, நிவாரண நிதி யாரால்அறிவிக்கப்படுகிறது என்பதை ஆராய்வது சுயநலமிக்க அரசியலாகும். காலம் காலமாக இதையே செய்து வரும்பாஜகவினர் இனிமேலாவது நியாயமான, மனிதாபிமான அடிப்படைகளில் மக்களை அணுக வேண்டும் என்றுவிரும்புகிறோம் என்று கூறியுள்ளார்.
பி.பி.எல். ரூ.25 லட்சம் நிவாரணம்:
இதற்கிடையே பி.பி.எல். செல்போன் நிறுவனம், கும்பகோணம் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.25லட்சம் நிவாரண நிதி அளிப்பதாக அறிவித்துள்ளது. மேலும், தனது வாடிக்கையாளர்கள் எஸ்.எம்.எஸ். மூலம்நன்கொடை அளிக்கவும் ஏற்பாடு செய்துள்ளது. பொதுமக்கள் நன்கொடை அளிக்க ஏதுவாக பி.பி.எல்.அலுவலகங்களில் நன்கொடை பெட்டி வைக்கப்பட்டுள்ளது.