அப்துல் கலாமின் கவிதாஞ்சலி
டெல்லி:
கும்பகோணம் கிருஷ்ணா பள்ளி தீ விபத்தில் பலியான 93 குழந்தைகளுக்கு இரங்கல் தெரிவித்து குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் எழுதியுள்ள கவிதை:
அன்று ஏன் கதிரவன் கடும்கரும் மேகங்களை ஊடுருவவில்லை
அன்று ஏன் கும்பகோணத் தென்றல், கனலாக மாறியது
அன்று ஏன் தாயுள்ளங்கள் பதறித் துடித்தன
இளஞ்சிறார்கள் அக்னித் தேவனின் சினத்தில் தத்தளித்தனர்
அன்று ஏன் அச்சிறார்கள் இறைவன் அக்னிக் குஞ்சுகளாக பரிணமித்தான்?
இறைவா இதுவோ கொடுமையிலும் கொடுமை
வளர்ந்து கல்விகற்று பணிசெய்யும் பருவத்தில்
பழுத்த வயதில் மறைந்த தாய் தந்தையரை பூமிக்கு கொடுப்பர்
இன்றோ காண்பது கொடுமையிலும் கொடுமை
பாலர்களை ஒவ்வொன்றாய் தந்தையர் பூமியில் புதைக்கும் காட்சி.
தாய்கண்ட கனவு, தந்தை கண்ட கனவு, சிறார்கள் கண்ட கனவு
எல்லாமே அக்னியின் வேகத்தில் கரிக்குஞ்சாய் பரிணமித்தன;
இறைவா குழந்தைகள் உன் படைப்பு - அவர்கள்
உன்னிடமே அடைக்கலத்தில் அடைந்தார்கள்
உன் அருளால் அக்குழந்தைகள் எங்கிருப்பினும் நன்றிருக்க.
கையேந்தி பிரார்த்திக்கிறோம் கையேந்தி பிரார்த்திக்கிறோம்
இறைவா உன் அருளால் - தம் குழந்தைகளை இழந்து
தவிக்கின்ற பெற்றோருக்கு மன அமைதி பாக்கியத்தை
மறுபடியும் வாழ்விலருள் - அவர்கள் எப்பொழுதும்
உனைநம்பி அமைதி வாழ்வு வாழ பிரார்த்திக்கிறேன்
தான் கும்பகோணம் சென்றால், பாதுகாப்பு காரணங்களுக்காக, மீட்புப் பணிகளில் மாவட்ட நிர்வாகம் முழுமையாகஈடுபட முடியாது என்பதால், அதை அவர் தவிர்த்துள்ளதாக குடியரசுத் தலைவர் மாளிகை வட்டாரங்கள்தெரிவிக்கின்றன. விரைவில் அவர் அங்கு செல்வார் என்று தெரிகிறது.