கிருஷ்ணசாமியை கொல்லும் முயற்சி தோல்வி
திருநெல்வேலி:
பாளையங்கோட்டையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின் கார் மீது வெடிகுண்டுவீசப்பட்டது. இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.
இச் சம்பவத்தையடுத்து திருநெல்வேலி உள்பட தென் மாவட்டங்களில் பெரும் பதற்றம் நிலவுகிறது. குறிப்பாகதென்காசி, ஒட்டப்பிடாரம், சங்கரன்கோவில், தென்காசி. ஆலங்குளம், கடையநல்லூர் ஆகிய இடங்களில் பதற்றம்அதிகமாக உள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஒட்டப்பிடாரம் அருகே இரண்டு அரசு பஸ்களை புதிய தமிழகம் கட்சியினர் சிறை பிடித்தனர். இதையடுத்துபோலீசார் விரைந்து வந்து பஸ்களை மீட்டனர்.
பல கிராமங்களில் நேற்றிரவு பஸ்கள் ரத்து செய்யப்பட்டுவிட்டன. நெல்லையில் இருந்து விருதுநகர், திருச்செந்தூர்,நாங்குனேரி, கோவில்பட்டி ஆகிய ஊர்களுக்கான பஸ்கள் இன்று காலை 8 மணிக்குப் பின்னரே இயக்கப்பட்டன
மாஞ்சோலை தோட்ட மேலாளர் அந்தோணி முத்து என்பவர் சில ஆண்டுகளுக்கு முன் கொலை செய்யப்பட்டவழக்கில் கிருஷ்ணசாமி உள்பட 11 மீதுவழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்காகபாளையங்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜராக வந்தார் கிருஷ்ணசாமி.
ஆரோக்கியநாதபுரம் என்ற இடத்தில் அவரது கார் சென்று கொண்டிருந்தபோது மோட்டர் சைக்கிளில் வந்த இருவர்கார் மீது வெடிகுண்டை வீசினார். அவரைத் தொடர்ந்து மேலும் மூன்று பைக்குகளில் வந்தவர்கள் 3 குண்டுகளைகார் மீது வீசினர்.
இதில் கார் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. குண்டுகள் வெடித்ததில் கிருஷ்ணசாமியின் முகம், தொடையில்காயம் ஏற்பட்டது. அவரது கட்சியின் இரு நிர்வாகிகளும் படுகாயமடைந்தனர்.
கிருஷ்ணசாமியின் காருக்கு பின்னால் வந்த அவரது கட்சியினரின் கார்கள் மீதும் குண்டுகள் வீசப்பட்டன.நிலைமை விபரீதமாகவதற்குள், காரை மிக வேகமாக ஓட்டிக் கொண்டு சென்றதால் அனைவரும் தப்பினர்.
இந்தக் கார்களைத் தொடர்ந்து பைக்குகளில் வந்த புதிய தமிழகம் கட்சித் தொண்டர்கள், வெடிகுண்டுகளைவீசியவர்களை விரட்டிச் சென்று பிடித்தனர். அவரிகளிடம் குண்டு வீசிய 9 பேர் சிக்கினர். அவர்களை போலீசார்கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, ராமையன்பட்டி பஞ்சாயத்துத் தலைவரைக்கொன்றவர்களுக்கு கிருஷ்ணசாமி அடைக்கலம் தந்ததாகவும், அதனால் அவரைப் பழி தீர்க்க முயன்றதாகவும்வாக்குமூலம் அளித்தனர்.
காயமடைந்த கிருஷ்ணசாமி பாளையங்கோட்டையில் தனியார் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அந்தமருத்துவமனை முன் ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இச் சம்பவம் குறித்து அறிந்தவுடன் புதிய தமிழகம் தொண்டர்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டனர்.சம்பவம் நடந்த ஆரோக்கியநாதபுரம் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன.
இந்தத் தாக்குதலையடுத்து, தென் மாவட்டங்களில் ஜாதிரீதியிலான பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளதால், போலீசார்குவிக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது.
பல இடங்களில் பஸ்கள் மீது கல்வீச்சு நடந்துள்ளது.
பாதுகாப்பு: கிருஷ்ணசாமி புகார்
போலீஸ் பாதுகாப்பு விலக்கப்பட்டதால்தான் குண்டு வீசி என்னைக் கொல்ல முயற்சி நடந்தது என டாக்டர்கிருஷ்ணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், எனக்கு அளிக்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு சமீபத்தில் விலக்கிக்கொள்ளப்பட்டு விட்டது. சம்பவம் நடந்தபோது ஒரு போலீஸ் கூட பாதுகாப்பு தரவில்லை. இதனால்தான் என்மீதுகொலை முயற்சி நடந்துள்ளது. அரிவாள் கலாச்சாரத்தால் மக்களை அச்சுறுத்தி அடிமைகளாக வைத்திருக்கநினைக்கும் சிறிய கும்பலின் செயல் இது.
இந்தத் தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற செயல்களால் என்னைமுடக்கிவிட முடியாது. தாக்குதல் நடத்தியவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். புதிய தமிழகம் கட்சித்தொண்டர்கள் அதுவரை அமைதி காக்க வேண்டும். மக்களுக்கு இடைஞ்சலாக எந்த போராட்டமும் நடத்தவேண்டாம் என்றார்.
திடுக்கிடும் வாக்குமூலம்:
கிருஷ்ணசாமியைத் தாக்கிவிட்டுத் தப்பும்போது பிடிபட்ட 9 பேர் தவிர இச் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 10 பேரையும் போலீசார்கைது செய்துள்ளனர்.
அவர்கள் போலீஸார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குண்டு வீசி தாக்குதல் நடத்துவதோடுமட்டுமல்லாமல், கிருஷ்ணசாமியை அரிவாள்களால் சரமாயாக வெட்டிக் கொலை செய்யவும் இந்த கும்பல் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.
கைதானவர்களில் சிவா, செண்பகம், சுரேஷ், கண்ணன், சக்தி, லட்சுமணன், முத்து, தங்கவேல், முத்துப்பாண்டியன் ஆகியோர் கொடுத்துள்ளவாக்குமூலம்:
நெல்லை மாவட்டம் ராமயன்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் கிருஷ்ணன் முன் விரோதம் காரணமாக அப்பகுதியைச் சேர்ந்த சிலரால்வெட்டிக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக 21 பேரை போலீஸார் கைது செய்தனர். ஆனால் முக்கியக் குற்றவாளிகள் சிலர்தலைமறைவாகி விட்டனர். அவர்களுக்கு டாக்டர் கிருஷ்ணசாமி அடைக்கலம் கொடுத்ததாக எங்களுக்குத் தெரிய வந்தது.
இதையடுத்து அவரைப் பழிவாங்க முடிவு செய்தோம். நீதிமன்றத்திற்கு வந்து விட்டுத் திரும்பும்போது அவரைக் கொலை செய்யதிட்டமிட்டோம். அதன்படி முதலில் குண்டு வீசித் தாக்குதல் நடத்தி விட்டு பின்னர் கிருஷ்ணசாமியை அரிவாள்களால் சரமாரியாக வெட்டிபடுகொலை செய்ய திட்டமிட்டிருந்தோம்.
ஆனால் குண்டு வீச்சுக்குப் பின் கார் டிரைவர் வேகமாக அதை ஓட்டுச் சென்று விட்டதால் எங்களது திட்டம் தோல்வி அடைந்து விட்டதுஎன்று அவர்கள் கூறியுள்ளனர்.
தலைவர்கள் கண்டனம்:
இதற்கிடையே கிருஷ்ணசாமி மீது நடந்த தாக்குதலுக்கு திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச் செயலாளர்வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோர்கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தென் மாவட்ட மக்கள் எந்தவிதமான இனமோதலுக்கும் இடம் கொடுக்காமல் அமைதி காக்க வேண்டும் எனவைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
தாக்கியவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைதுசெய்து சிறையில் அடைக்க வேண்டும் என திருமாவளவன்கோரியுள்ளார்.
ஏதாவது ஒரு காரணத்துக்காக சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு அராஜகத்தில் ஈடுபடுவது அநாகரீகமாகும்.இது போன்ற வன்முறைகளின் களமான தமிழகம் இருப்பது வெட்கத்துக்குரியது என்று கூறியுள்ளார் கி.வீரமணி.