லாலு வருகை: மண் குவளைகளுக்கு அவசர ஆர்டர்!
மதுரை:
மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் மதுரைக்கு வரவுள்ளதால், மதுரை ரயில் நிலைய அதிகாரிகள்கூடுதல் மண் குவளைகளுக்கு அவசரமாக ஆர்டர் கொடுத்துள்ளனர்.
ராஜபாளையம்-தென்காசி பிரிவு அகல ரயில் பாதை தொடக்க விழா, மதுரை-டெல்லி இடையிலான சம்பர்க்கிராந்தி நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ், தென்காசி-சென்னை இடையிலான புதிய வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் ரயில்ஆகியவற்றை மதுரை ரயில் நிலையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் தொடங்கி வைக்க லாலு வருகிறார்.
லாலு பிரசாத் யாதவ் வருகிறார் என்ற தகவல் கிடைத்ததிலிருந்து மதுரை ரயில் நிலைய அதிகாரிகளுக்குத் தூக்கம்போய் விட்டது. லாலுவின் கண்ணில் ஒரு குறை கூட தெரியக் கூடாது என்பதற்காக அனைத்து பணிகளையும் மிகக்கவனமுடன் செய்து வருகிறார்கள் ரயில் நிலைய அதிகாரிகள். குறிப்பாக குறைகள் எதுவும் இருக்கக் கூடாதுஎன்பதில் தீவிர கவனம் காட்டப்பட்டு வருகிறது.
லாலு அறிமுகப்படுத்திய மண் குவளைத் திட்டம் மதுரை ரயில் நிலையத்தில் பிரபலம் அடையவில்லை. யாரும் மண்குவளையை விரும்பாததால், வழக்கம் போலவே டீ, காபி போன்றவை பிளாஸ்டிக் கோப்பைகளில்தான் ரயில்நிலைய உணவகத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் லாலு வருகிறார் என்பதால், அவர் டென்ஷன் ஆகி விடக் கூடாது என்பதற்காக 30,000 மண்குவளைகளுக்கு அவசரம் அவசரமாக அதிகாரிகள் ஆர்டர் கொடுத்துள்ளனர். லாலு வரும்போது உணவகத்தில்ஒரு பிளாஸ்டிக் கோப்பை கூட இருக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளனர்.
இதுதவிர ரயில் நிலைய பிளாட்பாரங்கள் அனைத்திலும் ரயில்களின் வருகை, ரத்து, தாமதம் குறித்து அறிவிக்கும்டிஜிட்டல் பலகைகளும் வைக்கப்பட்டு வருகின்றன.
மேலும் கிழக்குப் பகுதியில் பொதுமக்கள் மல, ஜலம் கழிக்கப் பயன்படுத்தப்பட்டு வந்த திறந்த வெளி ரயில்வேகாலியிடத்தை இப்போது பூங்காவாக அதிகாரிகள் மாற்றியுள்ளனர்.
லாலு வருகையையொட்டி சென்னை சென்டிரல் ரயில் நிலையம் புதுப் பூச்சு கண்டுள்ளது. ரயில் நிலையம் முன்புசெயற்கை நீர்வீழ்ச்சி அமைக்கப்பட்டு வருகிறது. செப்டம்பர் 16ம் தேதி இந்த செயற்கை நீர்வீழ்ச்சியை லாலு திறந்துவைக்கவுள்ளார்.