ராமதாஸ், ஏ.கே.மூர்த்திக்கு செம்மொழிப் போராளி பட்டயம்
சென்னை:
பாமக நிறுவனர் ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. மூர்த்தி மற்றும் தமிழறிஞர்கள் 150 பேருக்குதலைநகர் தமிழ்ச்சங்கம் செம்மொழிப் போராளிப் பட்டயம் வழங்கி கெளரவித்தது.
சென்னையில் நடைபெற்ற தலைநகர் தமிழ்ச்சங்க வெள்ளிவிழா, தமிழ் ஆட்சிமொழி மற்றும் திருக்குறள் தேசியநூல் வலியுறுத்தல் மாநாட்டில் இந்தப் பட்டயங்கள் வழங்கப்பட்டன.
கடந்த ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றம் எதிரே செம்மொழி கோரிக்கையை வலியுறுத்திப் பட்டினிப் போராட்டம்நடத்திய 150 தமிழறிஞர்களுக்கும், அதற்கு ஆதரவாக குரல் கொடுத்தற்காக ராமதாசுக்கும்,கன்னியாகுமரி--டெல்லி ரயிலுக்கு திருக்குறள் தொடர்வண்டி எனப் பெயரிட்டதற்காக ஏ.கே. மூர்த்திக்கும் இப்பட்டயங்கள் வழங்கப்பட்டன.
விழாவில் ராமதாஸ் பேசியதாவது:
தமிழை அழிக்கும் நோக்கில் பகைவர்கள் செயல்பட்டு வருகின்றனர். அம்முயற்சியை நீக்கி தமிழ்மொழியைக்காக்க வேண்டும்.
அதற்கு தமிழறிஞர்களின் துணையும், வழிகாட்டுதலும் வேண்டும். சினிமா, தொலைக்காட்சிகளில் ஆங்கிலத்திணிப்பால் தமிழ் மொழி வேகமாக அழியும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.
விழாவில் தமிழ் வளர்ச்சித் துறை முன்னாள் இயக்குநர் மா.நன்னன், சென்னைப் பல்கலைக்கழக முன்னாள்துணைவேந்தர் பொற்கோ, தலைநகர் தமிழ்ச்சங்கத் தலைவர் சேது, பாமக தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர்பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications