வீரப்பன் மகள் தொடர்ந்து படிக்கலாம்: பள்ளி நிர்வாகம்
கடலூர்:
வீரப்பனின் இளைய மகள் பிரபா தொடர்ந்து தங்களது பள்ளியில் படிக்கலாம். அவரது பெயர் மாணவர்பதிவேட்டிலிருந்து நீக்கப்படவில்லை என்று கடலூர், கூத்தப்பாக்கம் புனித வளனார் மெட்ரிகுலேஷன் பள்ளிநிர்வாகம் கூறியுள்ளது.
சந்தனக் கடத்தல் வீரப்பனின் இளைய மகளான பிரபா கூத்தப்பாக்கம் புனித வளனார் மெட்ரிகுலேஷன் பள்ளியில்7வது வகுப்பு படித்து வருகிறார். வீரப்பன் இறந்த செய்தியையடுத்து அவரை பள்ளியிலிருந்து அழைத்துச் செல்லவந்தவர்களிடம், பிரபாவின் டி.சியை (இடமாற்ற சான்றிதழ்) பள்ளி நிர்வாகம் கொடுத்து அனுப்பியதாககூறப்பட்டது.
மேலும், தங்களது பள்ளியில் இனிமேல் பிரபா படிக்க முடியாது என்று பள்ளி நிர்வாகம் கூறியதாகவும் செய்திகள்வெளியாகின. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தந்தை செய்த தவறுக்கு மகளுக்குத் தண்டனையா என்றுமுன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியும், மனித உரிமை ஆர்வலருமான வி.ஆர்.கிருஷ்ணய்யர் உள்ளிட்ட பலர் பள்ளிநிர்வாகத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந் நிலையில் பிரபாவின் டி.சியை தாங்கள் கொடுக்கவில்லை என்று பள்ளி நிர்வாகம் மறுத்துள்ளது.இதுதொடர்பாக பள்ளி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், பிரபாவின் பெயர் பள்ளி மாணவர்பட்டியலிலிருந்து நீக்கப்படவில்லை. அவர் தொடர்ந்து எங்களது பள்ளியில் படிக்கலாம். அவரது பெற்றோர்விரும்பினால் மட்டுமே டி.சி. கொடுக்கப்படும் என்று அதில் விளக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பிரபாவின் படிப்பு பாதியில் பாதிக்கப்படும் சூழ்நிலை தவிர்க்கப்பட்டுள்ளது.