சிறையில் சங்கராச்சாரியாரை சந்தித்தார் முரளிமனோகர்
வேலூர் & சென்னை:
முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான முரளி மனோகர் ஜோஷி இன்று வேலூர் சிறையில்காஞ்சி சங்கராச்சாரியாரை சந்தித்துப் பேசினார். பின்னர் காஞ்சிபுரம் சென்று இளையவரான விஜயேந்திரரையும் சந்தித்தார்.
இன்று காலை முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர், இல.கணேசன், ஜனா. கிருஷ்ணமூர்த்தி, எச்.ராஜா ஆகியோருடன்வேலூர் வந்த ஜோஷி, சங்கராச்சாரியாரை சந்தித்தார்.
நாடே கொந்தளிக்கிறது:
பின்னர் செய்தியாளர்களிடம் ஜோஷி பேசுகையில், சிறையில் சாதாரண கைதியைப் போலவே ஜெயேந்திரர் நடத்தப்படுகிறார்.நீதிமன்றத்தின் தீர்ப்பை நான் ஏற்பேன் என சுவாமிஜி என்னிடம் தெரிவித்தார்.
தானே சமைத்துக் கொள்ள சங்கராச்சாரியாரை அனுமதித்தால் அவர் விஷம் சாப்பிட்டு இறந்துவிடுவார் என போலீசார் கூறுவதுமுட்டாள்தனமானது. நேபாளத்துக்கு ஓடிவிடுவார் என்கிறார்கள். இது போன்ற பேச்சுக்களால் மடத்தின் பெயர் கெட்டுவிட்டது.
மாநில அரசின் அனுமதியில்லாமல் போலீஸ் இந்தக் கைதை செய்திருக்காது. அவரது கைதினால் நாடே கொந்தளித்துக்கொண்டுள்ளது. இந்தக் கைதிற்கான காரணம் குறித்து நான் ஏதும் சொல்ல முடியாது. ஆனால், இது சாதாரண வழக்கல்ல என்பதுமட்டும் உறுதி.
20 நிமிடங்கள் சுவாமிஜியை சந்தித்தேன். முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்கும் திட்டம் ஏதும் என்னிடம் இல்லை. ஆனால்,நான் ஒரு அறிக்கையை அவருக்கு அனுப்பி வைப்பேன்.
நல்ல புத்தி வரட்டும்:
பக்தர்கள் அமைதி காக்குமாறும், இறைவனிடம் பிரார்த்தனை செய்யுமாறும் சங்கராச்சாரியார் கேட்டுக் கொண்டார்.எல்லோருக்கும் நல்ல புத்தி வர வேண்டும் என்று பிரார்திப்பதாக சொன்னார் சுவாமிஜி என்றார் ஜோஷி.
முன்னதாக சங்கராச்சாரியாரை சந்திக்க அனுமதி கோரி நேற்று முன் தினம் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பேக்ஸ் அனுப்பினார்ஜோஷி. ஆனால், திங்கள்கிழமை ரம்ஜான் விடுமுறை என்பதால், சிறையில் கைதிகளை யாரும் சந்திக்க முடியாது என பதில்அனுப்பிய ஜெயலலிதா, வேண்டுமானால் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு மேல் சந்திக்கலாம் என்று கூறியிருந்தார்.
இதனால் நேற்று முன் தினம் இரவு முதல் சென்னையில் நட்சத்திர ஹோட்டலில் காத்திருந்து இன்று சங்கராச்சாரியாரை சந்தித்தார்.
இளையவருடன் சந்திப்பு:
வேலூரில் சங்கராச்சாரியாரைச் சந்தித்த பின் காஞ்சிபுரம் சென்ற ஜோஷி, மடத்தில் இளையவர் விஜயேந்திரரையும் சந்தித்தார்.
வந்தார் பெர்னாண்டஸ்:
நேற்று டெல்லியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வீட்டில் நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டத்தில் சங்கராச்சாரியார்கைதுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டதோடு, அவரை கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரான ஜார்ஜ் பெர்னாண்டஸ் சென்றுசந்திப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
இதற்காக இன்று காலை பெர்னாண்டஸ் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
ஜெயேந்திரர் கைது செய்யப்பட்ட விதம் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. மிகப் பெரிய மடாதிபதியை மிகச் சாதாரணமான முறையில்தமிழக அரசு நடத்தியிருப்பது தவறு. அவர் மீதான கொலை வழக்கை விசாரிக்க பல வழிமுறைகள் உள்ள நிலையில் இரவோடுஇரவாக கைது செய்திருப்பது ஏற்புக்குரியதல்ல.
உடனிருந்த சு.சுவாமி:
ஜெயேந்திரர் விவகாரம் தொடர்பாக தேசிய ஜனநாயகக் கூட்டணி எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. இந்த விஷயத்தில்முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கும் திட்டம் ஏதும் என்னிடம் இல்லை என்றார் பெர்னாண்டஸ்.
இந்தப் பேட்டியின்போது ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியசுவாமி மற்றும் சந்திரலேகாவும் உடன் இருந்தனர்.
தொகாடியாவும் சந்திக்க திட்டம்:
விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீண் தொகாடியாவும் சங்கராச்சாரியாரை சந்திக்க வேலூர் செல்வார் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அவருக்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை.
சங்கராச்சாரியாரின் கைதை எதிர்த்து சென்னையில் நேற்று தொகாடியா நடத்திய ஆர்ப்பாட்டத்தில் 500 பேர் கூட கலந்துகொள்ளவில்லை என உளவுப் பிரிவு போலீசார் முதல்வருக்கு தகவல் அனுப்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications