வங்கதேச டூர்: இந்திய அணியில் ஸ்ரீராம், முரளி
கொல்கத்தா:
இந்தியாவுக்கும், வங்கதேச அணிக்கும் இடையே இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடருக்கானஇந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீதரன் ஸ்ரீராம், முரளி கார்த்திக் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வங்க தேசத்துடனான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இந் நிலையில் இன்று, ஒரு நாள்போட்டிகளுக்கான அணி அறிவிக்கப்பட்டது.
இதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மூத்த வீரர்களான கும்ப்ளே, வி.வி.எஸ். லட்சுமணன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.ஹரியானாவைச் சேர்ந்த வேகப் பந்துவீச்சாளர் ஜோகிந்தர் சர்மா, பீகாரைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் மகேந்திரா தோனி ஆகியோர்அணியில் இடம் பெற்றுள்ளனர்.
தமிழகத்தைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் ஸ்ரீராம், பந்து வீச்சாளர் முரளி கார்த்திக் ஆகியோர் மீண்டும் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
இந்தியாவும், வங்கதேசமும் 3 ஒரு நாள் போட்டிகளில் மோதவுள்ளன. டிசம்பர் 23, 26 மற்றும் 27 ஆகிய நாட்களில் இந்த ஒரு நாள்போட்டிகள் நடைபெறும். இதுதவிர 2 டெஸ்ட் போட்டிகளிலும் இரு அணிகளும் மோதவுள்ளன.
ஒரு நாள் தொடருக்கான இந்திய அணி: செளரவ் கங்குலி (கேப்டன்), ராகுல் டிராவிட் (துணை கேப்டன்), சச்சின் டெண்டுல்கர், வீரேந்திரஷேவாக், யுவராஜ் சிங், முகம்மது கைப், ஹர்பஜன் சிங், இர்பான் பதான், அஜீத் அகர்கர், ஜாஹிர் கான், முரளி கார்த்திக், திணேஷ்மோங்கியா, ஸ்ரீராம், மகேந்திர சிங் தோனி, ஜோகிந்தர் சர்மா.