நாகையில் சோனியா: கண் கலங்கினார்
சென்னை & நாகப்பட்டிணம்:
நாகப்பட்டிணத்தில் குடும்பத்தினரை இழந்த பெண்கள் கதறியழுதபோது சோனியாவும் கண் கலங்கினார்.
நேற்றிரவு சென்னை வந்த சோனியா ஆளுநர் மாளிகையில் தங்கினார். இன்று காலை ராயபுரம், பட்டினப்பாக்கம்,பெசன்ட் நகர், சீனிவாச நகர் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று கடல் அலைகளால் பாதிக்கப்பட்ட மக்களைச்சந்தித்து ஆறுதல் கூறினார்.
சோனியாவைக் கண்டதும் மீனவப் பெண்கள் கதறியபடி தங்கள் நிலையை விளக்கினர். மத்திய அரசு உங்களுக்குஎல்லா உதவிகளையும் செய்யும் என அவர்களிடம் சோனியா உறுதியளித்தார்.
பாதுகாப்பு அதிகாரிகளையும் மீறி பொது மக்களின் அருகே சென்று அவர்களிடம் சோனியா காந்தி பேசினார்.
அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நாகப்பட்டிணம் மாவட்டத்துக்குச் சென்றார். அங்கு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச்சென்ற சோனியா, மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அவர் கூறுகையில், இந்த பேரழிவில் இருந்து நாம் மீள வெகு நாட்களாகும். பாதிக்கப்பட்ட மக்களுக்குஉடனடியாக மறுவாழ்வு அளிக்கப்படும். தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்றார்.
கேரளத்தில் அத்வானி:
இதற்கிடையே கேரளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்ற முன்னாள் துணைப் பிரதமர் அத்வானி, கடல்கொந்தளிப்பால் ஏற்பட்ட சேத்தை தேசிய பேரழிவாக அறிவித்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை தந்துஉதவ வேண்டும் என்றார்.
சிதம்பரம் ஆறுதல்:
சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் மக்களை இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம். அவர் கூறுகையில், மிகவும்மோசமாக பாதிக்கப்பட்டுள்ள இந்த மக்கள் வீடுகளை, படகுகளை, உடமைகளை இழந்து தவிக்கின்றனர்.
அவர்களுக்கு உணவு, கம்பளி, உடை, தற்காலிக இருப்படி வசதி ஆகியவற்றை மாநில அரசுகள் செய்து தர வேண்டியுள்ளது. அதற்குத் தேவையான அனைத்துஉதவிகளையும் மத்திய அரசு உடனடியாகச் செய்யும்.
நிதி ஒதுக்கீடு ஒரு பெரிய தடையாக இருக்காது. மாநில அரசுகள் கோரும் நிதியை மத்திய அரசு உடனே ஒதுக்கித் தரும் என்றார்.