இலங்கையில் 21,715 பேர் பலி: சுக்குநூறான ரயில்
கொழும்பு:
இலங்கையில் சுனாமி கடல் அலைகளால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,715 ஆக உயர்ந்துவிட்டது. மேலும் பலரைக்காணவில்லை. பேரலைகளுக்கு ரயில் கூட தப்பவில்லை. சுமார் 1,200 பயணிகளுடன் ஒரு ரயிலே நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
இலங்கை முழுவதுமான சுனாமி தாக்குதலுக்கு 20,000க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர். இதைத் தவிர லட்சக்கணக்கானமக்கள் வீடுகளை இழந்துள்ளனர்.
வட கிழக்குப் பகுதிகள் தான் இந்த கடல் கொந்தளிப்பால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதிலும் அம்பாரை மாவட்டம் தான் மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு மட்டும் 8,308 உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளது.
வட கிழக்கில் விடுதலைப் புலிகள் பெரும் அளவிலான மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பிணங்களை மொத்தமாக புலிகள் அடக்கம்செய்து வருகின்றனர். இதுபற்றி புலிகள் கூறுகையில்,
இலங்கையின் மொத்த அழிவில் பாதி தமிழர் பகுதியில் ஏற்பட்டுள்ளது. பெண் புலிகள் நடத்திய அனாதை ஆசிரமத்தில் இருந்த 135சிறுவர்களையும் கடல் அடித்துச் சென்றுவிட்டது. முல்லைத்தீவில் இருந்த எங்கள் கடற்படை தளமும் நாசமாகிவிட்டது என்றனர்.
கொழும்பு நகரிலும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இலங்கை முழுவதும் இதுவரை 12,895 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இலங்கையில் 8இந்தியர்களும் உயிரிழந்துள்ளனர்.
சமுத்ரா தேவி என்ற ரயில் கடலோரமாக கொழும்பில் இருந்து கல்லி நகருக்குச் சென்றபோது பேய் அலைகள் அந்த ரயிலைத் தாக்கின.சுமார் 500 கிலோ மீட்டர் வேகத்தில் வந்த கடல் அலைகள் அந்த ரயிலை அடித்து உருட்டி விட்டன. இதில் அந்த ரயில்சின்னாபின்னாவானது.
பெட்டிகள் தனித்தனியே சிதறி பல மீட்டர் தூரத்துக்கு அப்பால் போய் விழுந்தன. இதில் 1,000 பயணிகள் பலியாகிவிட்டதாகத் தெரிகிறது.200 உடல்களே மீட்கப்பட்டுள்ளன. மற்றவை நீரில் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.