சுனாமியால் பலியான ஆசிரியருக்கு பதவி உயர்வு!
விருதுநகர் & நாகப்பட்டனம்:
வேளாங்கண்ணிக்குச் சென்று சுனாமி அலையில் சிக்கிப் பலியான ஆசிரியருக்கு, தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான உத்தரவுவந்ததால் அவரது குடும்பத்தினர் பெரும் சோகமடைந்தனர்.
விருதுநகரைச் சேர்ந்தவர் ஞானராஜ். இவர் கீழக்கரையில் உள்ள சி.எஸ்.ஐ. தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக உள்ளார். தனது உறவினர்டேவிட் என்பவருடன் சேர்ந்து குடும்பத்துடன் வேளாங்கண்ணிக்கு சென்றிருந்தார்.
26ம் தேதி காலை வீசிய சுனாமி அலையில் சிக்கி டேவிட் உள்ளிட்டவர்கள் பலியானார்கள். இவர்களில் ஞானராஜும் ஒருவர். இந்நிலையில் ஞானராஜ் தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு செய்யப்பட்டிருப்பதாக அவரது வீட்டு முகவரிக்கு கடிதம் வந்துள்ளது.இந்தக் கடிதத்தைக் கண்ட ஞானராஜ் உறவினர்கள் பெரும் சோகத்தில் மூழ்கினர்.
மனிதம் காக்கும் நாகூர் தர்கா:
இதற்கிடையே நாகப்பட்டனம் மாவட்டத்தில், சுனாமி அலைகளால் இறந்தவர்களின் உடல்களை, ஜாதி, மதம் பாராமல் தங்களது தர்காமையவாடியில் உள்ள மைதானத்தில் புதைத்து நாகூர் தர்கா மனித நேயத்தை காத்து வருகிறது.
சுனாமியின் கோர தாண்டவத்திற்கு ஆளான நாகை மாவட்டத்தில் இறந்தவர்களின் உடல்களைப் புதைக்கும், எரிக்கும் பணிகளை பல்வேறுஅமைப்பினரும், தொண்டு நிறுவனங்களும் மேற்கொண்டு வருகின்றனர்.
பிரபல நாகூர் ஆண்டவர் தர்காவைச் சுற்றிலும் உள்ள பல்வேறு கிராமங்களில் நூற்றுக்கணக்கானவர்கள் இறந்துள்ளனர். அவர்களின்உடல்கள் அனைத்தும் தர்காவுக்கு சொந்தமான மையவாடி மைதானத்தில் 4 குழிகள் தோண்டி புதைக்கப்பட்டு வருகின்றன.
தர்காவைச் சேர்ந்த ஊழியர்களும், இஸ்லாமிய சமுதாயத்தினரும் இரவு பகல் பாராமல் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரைமொத்தம் 216 உடல்கள் இங்கு புதைக்கப்பட்டுள்ளன.
அத்தோடு உயிர் தப்பி மீண்டவர்களை தர்காவில் தங்க வைத்து அவர்களுக்கு உணவும் வழங்கப்பட்டு வருகிறது. பேரலைகளில் சிக்கியமனிதர்களைக் காக்க முடியாவிட்டாலும் கூட மனிதம் என்றும் மாளாது என்று நிரூபித்து வருகிறது நாகூர் தர்கா.