இறந்தோரின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம்: இன்று வழங்கப்படுகிறது
சென்னை:
கடல் கொந்தளிப்பால் இறந்தோரின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிவாரண நிதியாக வழங்கும் பணி இன்று தொடங்கியது.
கடந்த டிசம்பர் 26சுந்தேதி சுனாமி அலைகள் தமிழக கடற்கரையை தாக்கி பேரழிவை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் சுனாமி அலைகள் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட முதல்வர் ஜெயலலிதா, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி தமிழ்நாடு முழுவதும் உதவித் தொகை வழங்கும் பணி இன்றுதொடங்கியது.
தமிழ்நாடு முழுவதும் இதுவரை 7,707 பேர் பலியானதாக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. (ஆனால் 12,000 வரை இறந்துள்ளதாகதொண்டு நிறுவனத்தினர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது) நாகப்பட்டினத்தில் மட்டும் பலியான வர்கள் எண்ணிக்கை 5,819 ஆகஉயர்ந்துள்ளது. சென்னையில் 206 பேர் பலியாகியுள்ளனர்.
இறந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல் தவணையாக ஈமக்கிரியை பணிகளுக்கு ரூ.15 ஆயிரம் வழங்கப்பட்டது. இந் நிலையில் மீதிரூ.85,000 இன்று வழங்கப்படுகிறது.
இதற்காக சென்னையில் மைலாப்பூர் மற்றும் தண்டையார்பேட்டை ஆகிய இடங்களில் 2 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டஆட்சியர் கண்ணுசாமி மேற்பார்வையில் தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் நிவாரண உதவிகள் வழங்கும் பணி நடைபெறுகிறது.
இதேபோல் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலையும், நிவாரண உதவிதொகுப்பும் இன்று முதல் வழங்கப்படுகிறது. இதற்காக திருவாரூர் முகாம்களில் தங்கியிருந்தவர்கள் நாகப்பட்டினம் வந்துள்ளனர்.
அதேபோல் குமரி மாவட்டத்தில் பலியான 817 பேரின் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் வழங்கும் பணி தொடங்கியுள்ளது.