அந்தமானிலிருந்து இதுவரை 4,900 பேர் மீட்பு
சென்னை - கொல்கத்தா:
அந்தமான் தீவுகளில் பரிதவித்துக் கொண்டிருந்த 3,700 பேரை இந்தியன் ஏர்லைன்ஸ் விமானங்கள் மீட்டுள்ளன. அதேபோல் 1,200 பேரைஇந்திய விமானப்படை மீட்டுள்ளது.
சுனாமியால் கடுமையாக பாதிக்கப்பட்ட இந்திய பகுதிகளில் அந்தமானும் ஒன்று. இங்கு மட்டும் 10,000க்கும் மேற்பட்டோர்பலியாகியிருப்பதாக கணிக்கப்படுகிறது.
சுனாமி பாதித்த அந்தமான் தீவுகளில் சிக்கியுள்ளோரை இந்திய விமானப்படையின் தாம்பரம் பிரிவு மீட்டு சென்னைக்குக் கொண்டுவருகிறது. இதற்காக சிறப்பு விமானங்கள் தாம்பரத்திலிருந்து இயக்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து தாம்பரம் விமானப்படை நிலைய கமாண்டர் ஏர் கமோடர் அலுவாலியா செய்தியாளர்களிடம் கூறுகையில், இதுவரைமொத்தம் 1,200 பேர் அந்தமான், நிக்கோபார் தீவுகளிலிருந்து மீட்கப்பட்டு தாம்பரம் கொண்டு வரப்பட்டுள்ளனர். இங்கிருந்து அவர்களதுசொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.
சுனாமி வீசிய டிசம்பர் 26ம் தேதி மட்டும் விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் 400 பேரை அந்தமானிலிருந்து விமானப்படை மீட்டது.
சுனாமியால் கார் நிக்கோபார் தீவில் உள்ள விமானப்படை தளம் முற்றிலும் சேதமடைந்து விட்டது. அந்த தளம் 2006ம் ஆண்டுக்குள்முழுவதுமாக சீரமைக்கப்படும் என்றார் அலுவாலியா.
முன்னதாக அந்தமானிலிருந்து அழைத்து வரப்பட்ட 90 பேர் தாம்பரம் வந்து சேர்ந்தனர்.
அதேபோல் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானங்களும் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளன. இந் நிறுவனத்தின் மூலம் இதுவரை 3,700 பேர்மீட்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக இந்தியன் ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர் நிருபர்களிடம் கூறியதாவது:
கடந்த 26ம் தேதி முதல் போயிங் விமானங்கள் போர்ட் பிளேயருக்குத் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது போர்ட் பிளேயர்விமான நிலையத்தில் பயணிகள் அதிகமில்லை.
இப்போது நிவாரணப் பொருட்களை அனுப்பும் பணி நடந்து வருகிறது. இதுவரை 110 டன் எடையுள்ள பொருட்கள் அங்குஅனுப்பப்பட்டுள்ளன. ஒரு பயணிகள் விமானத்தில் இருக்கைகளை அகற்றி, நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன என்றுகூறினார்.
இதற்கிடையே துணைநிலை ராணுவத்தினர் 80 பேர் மற்றும் 7 மருத்துவர்கள் இரண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானங்களில் அந்தமான்சென்றனர்.
வடகிழக்கு மாநிலத்தவர் புகார்:
இந் நிலையில் பல முறை கோரிக்கை விடுத்தும் தங்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லைஎன்ற வடகிழக்கு மாநிலங்களிலிருந்து அந்தமான் வந்தவர்கள் புகார் கூறியுள்ளனர்.
அந்தமானில் மோசமாக பாதிப்படைந்துள்ள கார் நிக்கோபார் மற்றும் ஹட் பே ஆகிய பகுதிகளில் கூலி வேலை செய்பவர்களில்பெரும்பாலோனோர் மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட கிழக்கு மாநிலங்களிலிருந்து வந்தவர்கள்.
கடல் கொந்தளிப்பிற்குப் பின் முகாம்களில் இவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்களைஅவரவர் மாநிலங்களுக்கு அனுப்பி வரும் நிலையில், தங்களைப் பற்றி யாரும் கவலைப்படுவது இல்லை என்று கிழக்கு மாநிலத்தவர்கள்புகார் கூறியுள்ளனர்.
அந்தப் பகுதி எம்.பி. மனோரஞ்சன் பக்தா மற்றும் அதிகாரிகளிடம் இது தொடர்பாக பல முறை கோரிக்கை விடுத்தும் எந்தப் பலனும்ஏற்படவில்லை என்று இவர்கள் கூறுகின்றனர்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மோகர் அலி என்பவர் கூறுகையில், எங்களுக்கு உணவு சரியாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் மனைவி,குழந்தைகளுடன் முகாமில் இருப்பது பெரிய கஷ்டமாக இருக்கிறது. எங்களது மாநிலத்திற்குப் போக விரும்புகிறோம்.
மேற்கு வங்க அரசுதான் இது தொடர்பாக உள்ளூர் நிர்வாகத்தை வலியுறுத்த வேண்டும் என்று கூறினார்.