சுனாமியிலிருந்து மீண்டவர் யானை தாக்கி சாவு
பொறையாறு:
நாகை மாவட்டம் திருக்கடையூர் பகுதியில் சுனாமி தாக்குதலிலிருந்து மீண்டவர், கோயில் யானை தாக்கி பரிதாபமாக இறந்தார்.
யானை தாக்கி இறந்த நபர் யார் என்று அடையாளம் தெரியவில்லை. அந்த நபர், சுனாமி தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியவர்,அவரது 2 குழந்தைகள் சுனாமிக்குப் பலியாகி விட்டனர். சுனாமி தாக்குதலுக்குப் பிறகு திருக்கடையூர் வந்த அவர் அங்குள்ள கோயில்வளாகத்தில் தங்கியிருந்தார்.
அப்போது இரவு 8.30 மணியளவில் திருப்பனந்தால் கோயில் யானை சிறப்பு பூஜைக்காக திருக்கடையூர் கோயிலுக்கு வந்தது.யானையைப் பார்த்ததும், அந்த அடையாளம் தெரியாத நபர், யானையிடம் சென்று அதன் காலைக் கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தார்.
குழந்தைகளை, உறவினர்களை இழந்து நிற்கிறேனே என்று கூறி அவர் பெரும் குரலெடுத்து அழுதுள்ளார். இதையடுத்து யானை மிரண்டு, 40வயது மதிக்கத்தக்க அந்த நபரை தூக்கி வீசி மிதித்தது. இதில் படுகாயமடைந்த அந்த நபர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்குக்கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.