இடிபாடுகளில் உயிருடன் மீட்கப்பட்ட முதியவர்
நாகப்பட்டிணம்:
சுனாமி தாக்கி 7 நாட்கள் கழித்து நாகப்பட்டிணத்தில் 63 வயது முதியவர் ஒருவர் மயங்கிய நிலையில் இடிபாடுகளுக்கு இடையில் இருந்துஉயிருடன் மீட்கப்பட்டார்.
அக்கரைப்பேட்டையில் இடிந்து போன வீடுகளை அகற்றும் பணியில் பொது மக்கள் ஈடுபட்டிருந்தபோது கந்தசாமி என்பவர் கிடந்தார்.அவரது உடலில் அசைவு இருந்ததால் உடனே நீரை முகத்தில் தெளித்தனர்.
இதையடுத்து மெதுவாக முழித்துப் பார்த்தார் கந்தசாமி. இதைத் தொடர்ந்து உடனடியாக அவர் தஞ்சாவூர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
இதற்கிடையே சுனாமியால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட நாகப்பட்டிணம் மாவட்டத்தில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்துவருகின்றன.
கட்சிகளுக்கு இல.கணேசன் கோரிக்கை:
இதற்கிடையே பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அகில இந்திய பாஜக செயலாளர் இல.கணேசன் நிருபர்களிடம்பேசுகையில்,
அரசியல் கட்சிகள் தங்களுக்கு இடையே இருக்கும் வேறுபாடுகளை மறந்து சுனாமி அலை தாக்கிய பகுதிகளில் மக்களுக்கு சேவை செய்யமுன்வர வேண்டும். நிவாரணப் பணிகளில் குறை காணும் வேலையை அரசியல் கட்சிகள் செய்யக்கூடாது என்றார்.