கனடா பிரதமர் இந்தியா வருகை: சிங்குடன் சந்திப்பு
டெல்லி:
பிரதமர் மன்மோகன் சிங்கை கனடா பிரதமர் பால் மார்ட்டின் நாளை சந்தித்து, இருதரப்பு உறவுகள் மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்துவிவாதிக்கிறார்.
இரண்டு நாள் பயணமாக மார்ட்டின் இந்தியா வருகிறார். அவருடன் சுகாதாரத் துறை அமைச்சர் உஜ்ஜல் தோசன்ஜ், தேசிய அறிவியல்ஆலோசகர் ஆர்தர் கார்ட்டி மற்றும் எம்.பிக்கள் குழு இந்தியா வருகிறது.
மார்ட்டின் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமைச் சந்தித்துப் பேசுகிறார். பின்னர் இருதரப்பு உறவு மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்துமன்மோகன் சிங்குடன் ஆலோசனை நடத்துகிறார்.
இராக், ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், ஐ.நா. சபையை மாற்றியமைப்பது ஆகியவவை குறித்து இருநாட்டுத்தலைவர்களும் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அப்போது சுனாமி பாதிப்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து மார்ட்டினிடம் மன்மோகன் சிங் விளக்கிக் கூறுகிறார்.
பின்னர் வெளியுறவுத் துறை நட்வர் சிங்கை மார்ட்டின் சந்தித்துப் பேசுகிறார்.
தனது இரண்டு நாள் பயணத்தின்போது இந்திய கடல் பகுதியில் சுனாமி அலைகளைக் கண்டறியும் கருவியை அமைப்பது குறித்து,தற்போது இந்தியாவில் இருக்கும் கனடா சுனாமி வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
தனது பயணம் குறித்து மார்ட்டின் கூறுகையில்,
இந்தப் பயணத்தின்போது சுனாமி அலையால் பாதிக்கப்பட்ட இந்தியாவிற்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்வேன். அதோடுஇருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும், சர்வதேச பிரச்சினைகளை விவாதிக்கவும் இந்த பயணம் பயன்படும் என்று கூறினார்.
இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,
ஜி8 நாடுகளில் கனடா முக்கிய நாடாகும். காமன்வெல்த் மற்றும் ஏசியான் அமைப்பில் இருநாடுகளும் அங்கம் வகிக்கின்றன.இருநாடுகளுக்கு இடையே வர்த்தகத் துறையில் நல்லுறவு இருக்கிறது.
கடந்த ஆண்டு இருநாடுகளுக்கு இடையே 2,155 மில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தகம் நடந்தது. துணிகள், இரும்பு, வேதிப்பொருட்கள்,நகை ஆகியவற்றை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது.
கனடாவில் இருந்த பேப்பர், தாதுப் பொருட்கள், சைவ எண்ணெய் ஆகியவை இறக்குமதியாகின.
இரு நாடுகளிலும் பரஸ்பரம் முதலீடு தொடங்கியுள்ளது. இந்திய மென்பொருள் நிறுவனங்கள் கனடாவில் தங்களது கிளைகளைத்தொடங்கியுள்ளன என்று கூறியுள்ளது.