இடிபடப் போகும் கடலோர வீடுகள்: கணக்கெடுப்பு துவக்கம்!
தூத்துக்குடி:
கடலிலிருந்து 500 மீட்டர் தூரத்துக்குள் உள்ள வீடுகளைக் கணக்கெடுக்கும் பணியை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இதனால் தங்களதுவீடுகள் இடிக்கப்படலாம் என்ற அச்சம் கடலோரப் பகுதியில் வசிக்கும் மக்கள் மனதில் பரவியுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 26ம் தேதி நடந்த சுனாமித் தாக்குதலுக்கு தமிழக கடலோரப் பகுதிகளில் வசித்த ஆயிரக்கணக்கானோர்பலியாகினர். பல ஆயிரக்கணக்கான வீடுகள் கடல் அலையால் அடித்துச் செல்லப்பட்டன.
வீடிழந்த பல்லாயிரக்கணக்கானோர் தற்காலிக முகாம்களில் குடியேறியுள்ளனர்.
கடலுக்கு வெகு அருகில் வசித்ததால்தான் இந்த அளவுக்கு உயிர்ச் சேதம் மற்றும் பொருட் சேதம் ஏற்பட்டது.
கடலிலிருந்து 500 மீட்டர் தொலைவுக்குள் வீடுகள் கட்டக் கூடாது என்ற மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் உத்தரவு மீறப்பட்டு கடலைஒட்டி பல்லாயிரக்கணக்கான வீடுகள் தமிழக கடலோர மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ளன.
இந் நிலையில் இந்த வீடுகளைக் கணக்கெடுக்கும் பணியை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
முதல் கட்டமாக தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளான திரேஸ்புரம், ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், கூத்தங்குடி,பெருமணல் உள்ளிட்ட ஊர்களில் கடலிலிருந்து 500 மீட்டர் தொலைவுக்குள் கட்டப்பட்டுள்ள குடிசைகள், வீடுகள், கட்டடங்களைக்கணக்கெடுக்கும் பணியில் அரசு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் இப்பகுதி மக்களிடையே வீடுகள் இடிக்கப்படலாம் என்ற அச்சம் பரவியுள்ளது.
தங்களது வீடுகளை இடிக்க அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறி, கணக்கெடுக்க வந்த ஊழியர்களை முற்றுகையிட்டு அவர்களை திரும்பிப்போகுமாறு பொது மக்கள் பல இடங்களில் போராட்டம் நடத்தினர்.
ஆனால் இது சாதாரணக் கணக்கெடுப்புதான் என்று ஊழியர்கள் கூறியும் கூட கிராமத்து மக்கள் திருப்தி அடையவில்லை. அரசின் இந்தக்கணக்கெடுப்பு தமிழக கடலோரப் பகுதி மக்களிடையே புதிய பீதியை பரப்பியுள்ளது என்னவோ நிஜம்.