அக்ரஹாரத்தில் மசூதி: அனுமதி கோரி வழக்கு
மதுரை:
அக்ரஹாரப் பகுதியில் மசூதி கட்டுவதற்கு போலீஸார் தடையாக உள்ளதாகக் கூறி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்குதொடரப்பட்டுள்ளது.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஜாகீர் ஹூசேன் என்பவர் மதுரை நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், ராமநாதபுரம் அக்ரஹாரம் பகுதியில் 54 முஸ்லீம் குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இதன் சுற்றுப் பகுதியில் தொழுகை நடத்தமசூதியே கிடையாது. 2 கிமீ தூரம் சென்றுதான் தொழுகை நடத்த வேண்டியுள்ளது.
இதையடுத்து நானும் எனது சகோதரர் குத்புதீன், கீழக்கரையைச் சேர்ந்த கலீல் அகமது ஆகியோர் சேர்ந்து புது அக்ரஹாரம் பகுதியில் மசூதிகட்ட நிலம் வாங்கினோம். மசூதி கட்ட அனுமதி கோரி ராமநாதபுரம் நகராட்சித் தலைவருக்கு விண்ணப்பித்தோம்.
எங்களது மனுவை அவர் ராமநாதபுரம் ஆட்சித் தலைவருக்கு அனுப்பினார். ஆட்சியர் உத்தரவுப்படி ஆர்.டி.ஓ விசாரணை நடத்தினார்.மசூதி கட்டத் தடையில்லை என்று பரிந்துரைத்தும், இதற்கு தடையில்லா சான்றிதழ் வழங்கலாம் என்று கூறியும் கலெக்டருக்கு கடந்தஆண்டு செப்டம்பர் 2ம் தேதி ஆர்.டி.ஓ.கடிதம் அனுப்பினார்.
இதற்குப் பிறகும் எங்களுக்கு ஆட்சித் தலைவர் அனுமதி தரவில்லை. போலீஸ் தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டதால் அனுமதிவழங்கப்படாமல் உள்ளதாகத் தெரிகிறது.
மசூதி கட்ட அனுமதிக்கக் கோரி அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த நீதிபதி ரவிராஜப் பாண்டியன், 4 வாரங்களுக்குள் இதுதொடர்பாக முடிவெடுக்குமாறு ஆட்சித் தலைவருக்குஉத்தரவிட்டார்.