அரசியலில் சுனாமி ஏற்படுத்த ஜெ. முயற்சி: காங்
மதுரை:
39 தொகுதிகளிலும் மறு தேர்தல் நடத்தக் கோருவதன் மூலம் அரசியல் சுனாமி ஏற்படுத்த முதல்வர் ஜெயலலிதா முயற்சிக்கிறார் என்றுமத்திய நீர்வளத் துறை அமைச்சர் பிரியரஞ்சன்தாஸ் முன்ஷி குற்றம் சாட்டினார்.
தென்னக நதிகள் இணைப்பு குறித்து ஆய்வு நடத்துவதற்காக பிரியரஞ்சன்தாஸ் முன்ஷி மதுரை வந்தார். அங்கு நிருபர்களிடம் அவர்பேசுகையில்:
நதிகள் இணைப்புத் திட்டத்தை மத்திய அரசு கைகழுவி விடவில்லை. நதிகள் இணைப்புத் திட்டத்திற்கு முன்னோடியாக ராஜஸ்தான் மற்றும்மத்தியப் பிரதேசம் நதிகள் இணைப்பு, மத்தியப் பிரதேசம் மற்றும் உத்திரப் பிரதேசம் நதிகள் இணைப்பு, தென்னக நதிகள் இணைப்பு ஆகியதிட்டங்கள் நிறைவேற்றப்படும்.
இந்த மண்டல நதிகள் இணைப்பு திட்டம் தொடர்பாக நடத்தப்படும் ஆய்வு வரும் டிசம்பர் மாதம் அறிக்கையாகத் தாக்கல் செய்யப்படும்.அதன்பின்பு இவற்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக விரிவாக ஆராயப்படும். சம்பந்தப்பட்ட மாநில முதல்வர்களுடன்பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
மண்டல நதிகள் இணைப்புத் திட்டத்தை முதலில் முன்வைத்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, இதற்கான நடவடிக்கைகள் 2003ம்ஆண்டுக்குள் தொடங்கப்படும என்று உறுதியளித்தது. ஆனால் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆனால் இப்போது மாநில முதல்வர்களுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நதிகள் இணைப்பு குறித்து ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு விதமான கருத்து தெரிவித்து வருகின்றன. இந்த திட்டத்தைநிறைவேற்றும்போது இடம்பெயரும் மக்களை எங்கு குடியமர்த்துவது, சுற்றுப்புறச் சூழல் உள்ளிட்ட அம்சங்களையும் கருத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது. இது தொடர்பாக மத்திய அரசு விரிவான ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
சுனாமி தாக்குதல் நடந்த கரையோரப் பகுதிகளில் கடலரிப்பைத் தடுக்க தடுப்புச் சுவர்கள் கட்டுவது, மாங்குரோவ் காடுகளை வளர்ப்பதுஉள்ளிட்ட திட்டங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
தடுப்புச் சுவர் கட்ட வேண்டும் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.இருப்பினும் இது குறித்து சர்வதேச நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
சர்வதேச அளவில் மாங்குரோவ் காடுகளை வளர்ப்பதுதான் சிறந்த முறையாகக் கூறப்படுகிறது. இருப்பினும் இந்தியக் கடலோரப்பகுதிகளின் தன்மை இடத்திற்கு இடம் மாறுபடுகிறது. எனவே அதைக் கருத்தில் கொண்டு தடுப்புச் சுவர் தேவையான இடங்களில் தடுப்புச்சுவரும், மாங்குரோவ் காடுகள் தேவையான இடங்களில் காடுகளும் அமைக்கப்படும்.
கடலரிப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக ஆசிய மேம்பாட்டு வங்கியை மத்திய அரசு அணுகியுள்ளது.
நாகப்பட்டினம் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக ஆழ்துளைக் கிணறுகளை அமைக்க மத்திய அரசுதிட்டமிட்டுள்ளது. அதேபோல் கடல் நீர் புகுந்ததால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களின் உப்புத் தன்மையைப் போக்கவும் திட்டங்கள்தீட்டப்பட்டு வருகின்றன.
சுனாமி நிவாரண நிதி வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சமாக செயல்படுவதாக ஜெயலலிதா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். சுனாமிபேரழிவு இதுவரை நமது நாடு கண்டிராத ஒன்று. இத்தகைய நிகழ்வுகளின்போது மத்திய அரசும், மாநில அரசும் ஒருங்கிணைந்துசெயல்பட்டால்தான், துயர் துடைக்கும் பாதையில் நீண்ட தூரம் செல்ல முடியும்.
தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் மறு தேர்தல் நடத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப் போவதாக ஜெயலலிதாகூறியிருக்கிறார். இதன் மூலம் அரசியலில் சுனாமி ஏற்படுத்த முயற்சிக்கிறார் என்றார்.