சென்னை- ஹெளரா ரயிலுக்கு குண்டு மிரட்டல்
சென்னை:
சென்னை சென்ட்ரலில் இருந்து செல்லும் ஹெளரா எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்துரயிலில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. ஆனால், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கொல்கத்தாவிற்கு தினமும் காலை 09.05 மணிக்கு ஹெளரா எக்ஸ்பிரஸ் செல்கிறது. இந்தரயில் வண்டியை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக இன்று காலை 8 மணிக்கு ஒரு தொலைபேசி மிரட்டல் வந்தது.
இதையடுத்து ரயில்வே போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.
சோதனை நடந்து கொண்டிருந்தபோது, கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் பிளாட்பாரத்துக்கு வந்து சேர்ந்தது. அந்த ரயிலின் ஏ.சி. பெட்டிஅருகே ஒரு மர்ம சூட்கேஸ் கிடந்தது.
இதற்கு முன்பு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கும் வெடிகுண்டு வந்திருந்ததால் அந்த சூட்கேஸ் பரபரப்பை உண்டாக்கியது. இதையடுத்துவெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்து சூட்கேசை தனியாக ஒரு இடத்திற்குக் கொண்டு சென்ற திறந்து பார்த்தனர்.
அதில் வெடிகுண்டு எதுவும் இல்லை. துணிமணிகளே இருந்தன. இந்த களேபரத்தால் ஹெளரா எக்ஸ்பிரஸ் தாமதமாகக் கிளம்பிச் சென்றது.
தொலைபேசி மிரட்டல் மற்றும் மர்ம சூட்கேஸ் காரணமாக இன்று காலை சென்டிரல் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.