வழக்கை கண்டு பயப்பட மாட்டேன்: குருமூர்த்தி
சென்னை:
காஞ்சிபுரம் போலீஸார் என் மீது பதிவு செய்துள்ள பொய் வழக்கை சட்டப்படி சந்திப்பேன், பயந்து ஓட மாட்டேன் என்று பிரபலஆடிட்டரும், ஆர்.எஸ்.எஸ். ஆதரவு சுதேசி ஜாக்ரன் மஞ்ச் அமைப்பின் தலைவருமான குருமூர்த்தி கூறியுள்ளார்.
சங்கரராமன் கொலை வழக்கில், சட்டப்படி தெரிவிக்க வேண்டிய தகவல்களை தெரிவிக்காமல் மறுத்தல் (குற்றவியல் சட்டப் பிரிவு 176),விசாரணை அதிகாரிகளின் கேள்விகளுக்குப் பதிலளிக்க மறுத்தல்(பிவு 179), அதிகாரிகளுக்கு போலி ஆதாரங்களை அளித்தல் (191)ஆகிய பிரிவுகளின் கீழ் குருமூர்த்தி மீது காஞ்சி தனிப்படை போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந் நிலையில் குருமூர்த்தி அவரது சென்னை வீட்டில் இல்லை. அவர் எங்கு சென்றார் என்பது தெரியாமல் இருந்து வந்தது. தலைமறைவானகுருமூர்த்தியைப் பிடிக்க காஞ்சிபுரம் போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். குருமூர்த்தியின் வீடும் தீவிர போலீஸ்கண்காணிப்பில் உள்ளது.
இதற்கிடையே தலைமறைவாக உள்ள குருமூர்த்தி மும்பையில் இருப்பதாக தற்போது தெரியவந்துள்ளது. தன் மீது போலீஸார் பதிவுசெய்துள்ள வழக்குகள் குறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், என் மீது விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு, சுத்த கேலிக் கூத்து. காஞ்சிபுரம் போலீஸார்தேவையில்லாமல் வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள்.
காஞ்சிபுரம் போலீஸார் என்னை விசாரித்தபோது நான் கூறிய பல தகவல்கள் உடனடியாக சில வார இதழ்களில் வெளிவந்தன.அதுதொடர்பாக என்னிடம் விசாரணைை நடத்திய அதிகாரிகள் மீது நான் வழக்குத் தொடர திட்டமிட்டிருந்தேன். இதைத் தொடர்ந்தே என்மீது பொய்யான புகார்களை காஞ்சிபுரம் போலீஸார் சுமத்தியுள்ளனர்.
என் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் நான் பயப்பட மாட்டேன். எனது முடிவில் மாற்றமில்லை. நிச்சயம் அவர்கள் மீது நான் வழக்குப்போட்டே தீருவேன் என்று கூறியுள்ளார் குருமூர்த்தி.
இதற்கிடையே, குருமூர்த்தி தலைமறைவாகவில்லை என்றும் அலுவல் காரணமாக மும்பையில் தங்கியிருப்பதாகவும், இன்னும் 2வாரங்களுக்கு அவர் தமிழகத்திற்கு வர மாட்டார் என்றும் அவரது வழக்கறிஞர் மகேஷ் ஜெத்மலானி, காஞ்சிபுரம் டி.எஸ்.பி. மோகனவேலு,கூடுதல் எஸ்.பி. சக்திவேல் ஆகியோருக்கு பேக்ஸ் மூலம் தெரிவித்துள்ளார்.
குருமூர்த்தியின் செல்போன் எண்ணையும் அவர் கொடுத்துள்ளார்.
பிப்ரவரி 26ம் தேதிதான் குருமூர்த்தி சென்னைக்கு வருவார். அப்போது அவரை அவரது வீட்டில் சந்திக்கலாம் என்றும் காஞ்சி காவல்துறைஅதிகாரிகளுக்கு மகேஷ் ஜெத்மலானி தெரிவித்துள்ளார்.
மும்பையில் இருந்தபடி, முன் ஜாமீனுக்கு குருமூர்த்தி முயற்சித்து வருவதாகக் கூறப்படுகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால்நாளைதான் அவர் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்ய முடியும். ஆனால் இன்றைக்குள் குருமூர்த்தியைப் பிடித்து விட வேண்டும் என்றுகாஞ்சிபுரம் போலீஸார் படு வேகத்துடன் இருப்பதாகத் தெகிறது.
சங்கராரமன் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டவுடன் அதைக் கடுமையாக சாடி த நியூ இந்தியன்எக்ஸ்பிரஸ் நாளிதழில் குருமூர்த்தி விமர்சனக் கட்டுரை எழுதியிருந்தார். இந்தக் கட்டுரை தொடர்பாக டிசம்பர் 9ம் தேதி அவரை காட்டுப்பங்களாவிற்கு வரவழைத்த தனிப்படை போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
எஸ்.பி. பிரேம்குமாரே நேரடியாக நடத்திய இந்த விசாரணையின்போது குருமூர்த்தி மிரட்டப்பட்டார் என்றும் கூறப்பட்டது.விசாரணைக்குப் பின்னர் தன்னிடம் போலீஸார் நடத்திய விசாரணையின் வீடியோ பதிவை வழங்க வேண்டும் என்று கோரி தனதுவழக்கறிஞர் மூலம் பிரேம்குமாருக்கு நோட்டீஸ் அனுப்பினார். ரூ. 1,000க்கான காசோலையையும் இணைத்து அனுப்பியிருந்தார்.
இந் நிலையில் குருமூர்த்தி மீது விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
குருமூர்த்தி மீது போலீஸார் கோபம் கொள்ள இன்னொரு முக்கிய காரணம் கூறப்படுகிறது. சமீபத்தில் கலவை சென்ற குருமூர்த்தி அங்குஜெயேந்திரரை சந்தித்துப் பேசியுள்ளார். அதன் தொடர்ச்சியாக காண்டிராக்டர் ரவி சுப்பிரமணியத்தின் வழக்கறிஞர்களை குருமூர்த்திசந்தித்துள்ளார். அவர்களிடம் நீண்ட நேரம் அவர் பேசியுள்ளார்.
அப்ரூவர் ஆகும் முடிவை கைவிடுமாறு ரவி சுப்பிரமணியத்தை வலியுறுத்துமாறு அவர்களிடம் கேட்டுக் கொண்டார் குருமூர்த்தி. இதைத்தொடர்ந்து ரவி சுப்பிரமணியத்தை காஞ்சிபுரம் கிளைச் சிறைக்கு சென்று சந்தித்த அவரது வழக்கறிஞர்கள் குருமூர்த்தி கூறிய தகவலை ரவிசுப்பிரமணியத்திடம் தெரிவித்துள்ளனர். ஆனால் குருமூர்த்தியின் கோரிக்கையை ஏற்க ரவி மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து ரவி சுப்பிரமணியம் மூலமே தகவல் அறிந்த காஞ்சிபுரம் போலீஸார் உஷாரடைந்தனர். சாட்சிகளை கலைக்கும் வேலையில்குருமூர்த்தி இறங்கியிருப்பதை அறிந்து அவரை மடக்கத் திட்டமிட்டே, 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ததாக கூறப்படுகிறது.