பெண் நடனக் கலைஞரை தூதராக அனுப்பிய ஜெயேந்திரர்
சென்னை:
திருக்கோஷ்டியூர் மாதவனை சமாதானப்படுத்துவதற்காக பிரபல பெண் நடனக் கலைஞரை ஜெயேந்திரர் தூதராக அனுப்பினார் எனசென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
திருக்கோஷ்டியூர் மாதவன் தாக்கப்பட்ட வழக்கில் ஜெயேந்திரர் முன் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அந்த மனு இன்று நீதிபதி முருகேசன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஜெயேந்திரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தினகரன் வாதிடுகையில், இந்த வழக்குக்கும் ஜெயேந்திரருக்கும் எந்தவிதத்தொடர்பும் கிடையாது. இது பொய் வழக்கு என்றார்.
அப்போது அரசுத் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் துரைசாமி எழுந்து, திருக்குறுங்குடி கோவிலில் உள்ள சிவன் சன்னதியை அகற்றஜெயேந்திரர் தூண்டுதலின் பேரில்,டிவிஎஸ் நிறுவன ஊழியர்கள் செயல்பட்டு சிவன் சன்னதியை அகற்றினர்.
இதைக் கண்டித்து மாதவன் தொடர்ந்து அறிக்கைகளை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து அவரை சமாதானப்படுத்துவதற்காகசென்னைக்கு வரவழைக்கப்பட்டார். அப்போது தனது சார்பில் பிரபல பெண் நடனக் கலைஞர் ஒருவரை ஜெயேந்திரர் மாதவனிடம்அனுப்பினார்.
இதைக் கடுமையாக மாதவன் கண்டித்த காரணத்தால்தான் அவரைத் தாக்கினர். எனவே இந்த வழக்கில் ஜெயேந்திரருக்கு சம்பந்தம் இல்லைஎன்று கூற முடியாது. எனவே ஜெயேந்திரருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி முருகேசன், நாளை மறுதினம் தீர்ப்பு வழங்குவதாக அறிவித்தார்.