நாளை தொடங்குகிறது திண்டுக்கல் திமுக மாநாடு
திண்டுக்கல்:
திமுகவின் மண்டல மாநாடு நாளை திண்டுக்கலில் தொடங்குகிறது.
![]() |
மதுரை புறநகர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்ட திமுகவினர் இணைந்து நடத்தும் இம் மாநாட்டுக்காக கோட்டைப் பட்டியில் 150 ஏக்கர் பரப்பளவில் மிகப் பெரிய மைதானம் உருவாக்கப்பட்டுள்ளது.
அண்ணாநகர் என்று பெயரிடப்பட்டுள்ள இங்கு 800 அடி நீள பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டு மேடை கான்க்ரீட்டால் கட்டிவிட்டார் திண்டுக்கல் மாவட்டச் செயலாளரான ஐ.பெரியசாமி.
மாநாட்டுக்கு அரசு நிலத்தையோ, மைதானத்தையோ எடுத்தால் கடைசி நேரத்தில் பிரச்சனை தந்துவிடுவார்கள் என்று அஞ்சிய மாவட்ட திமுகவினர், கோட்டைப்பட்டியில் பட்டா நிலங்களை குத்தகைக்கு எடுத்து புல்டோசர்களைக் கொண்டு சரி செய்து மாநாட்டுத் திடலை உருவாக்கியுள்ளனர்.
பல இடங்களில் போரிங்குகள் போட்டு குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. அரசு மின்சாரத் தடையை ஏற்படுத்தலாம் என்பதால் ராட்சத ஜெனரேட்டர்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
![]() |
6 பிராமாண்ட நுழைவு வாயில்களுடன் உருவாக்கப்பட்டுள்ள அண்ணாநகர் பகுதி மற்றும் பந்தல் மின் விளக்குகளால் ஜொலிக்கின்றன.
பந்தலின் மேற்புறம் கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோர் உருவத்துடன் கூடிய பலூன்கள் பறக்க விடப்பட்டுள்ளன.
மாநாட்டில் கலந்து கொள்வதற்காக திமுக தலைவர் கருணாநிதி இன்றிரவு சென்னையிலிருந்து பாண்டியன் ரெயில் மூலம் புறப்பட்டு நாளை அதிகாலை திண்டுக்கலை அடைகிறார்.
நாளை காலை 9 மணியளவில் அண்ணா சிலைக்கு கருணாநிதி மாலை அணிவித்து விட்டு பிறகு மாநாட்டு பந்தலுக்கு வருகிறார். அவருடன் திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமி, துணைப் பொதுச்செயலாளர்கள் மு.க.ஸ்டாலின், பரிதி இளம்வழுதி, முதன்மை செயலாளர் துரை முருகன் மற்றும் மத்திய அமைச்சர்கள் வருகின்றனர்.
மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சி இசை முரசு நாகூர் அனிபாவின் இன்னிசை நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. கருணாநிதியின் வயதைக் குறிக்கும் வகையில் பந்தலின் முன்பு 83 அடிக் கொடிக்கம்பம் வைக்கப்பட்டுள்ளது. இதில் வண்ணை தேவகி கொடியேற்றுகிறார்.
மாநாட்டை முன்னாள் அமைச்சர் ரகுமான் கான் திறந்து வைத்து உரையாற்றுகிறார். கோ.சி. மணி தலைமை வகிக்கிறார். தொடர்ந்து பல்வேறு பேச்சாளர்கள் பேசுகின்றனர். இறுதியாக பொதுச்செயலாளர் அன்பழகன் நிறைவுரையாற்றுகிறார்.
![]() |
தமிழ் மாநில இந்திய முஸ்லிம் லீக் தலைவர் காதர் முகைதீன், தமுமுக மாநில செயலாளர் ஜவாஹிருல்லா, எம்.ஜி.ஆர்.கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன், அ.இ.மூ.மு.க.தலைவர் டாக்டர். சேதுராமன், பேராயர் எஸ்ரா சற்குணம் மற்றும் பலர் பேசுகின்றனர்.
நிறைவாக இரவு 8 மணியளவில் திமுக தலைவர் கருணாநிதி பேருரையாற்றுகிறார். மாநாட்டையொட்டி திண்டுக்கலில் இருந்து மதுரை வரை சாலையின் இரு மருங்கிலும் ஆயிரக்கணக்கான திமுக கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளன.















Click it and Unblock the Notifications