காங். கோஷ்டிப் பூசல்: திறந்து, மூடப்பட்ட இந்திரா சிலை!
திருச்சி:
காங்கிரஸ் கட்சியினரின் கோஷ்டிப் பூசலால், திறக்கப்பட்ட இந்திரா காந்தி சிலை மீண்டும் மூடப்பட்டது.
திருச்சி புத்தூர் நாலு ரோட்டில் இந்திரா காந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத் தலைவராக முன்பிருந்த கல்யாணராமன் தனது பெயரில் இந்தசிலைக்கு மாநகராட்சியின் அனுமதியைப் பெற்றிருந்தார். சிலை அமைக்கக் குழுவும் நியமிக்கப்பட்டு சிலை வைத்து முடிக்கப்பட்டது.
சிலையை நிறுவி பல மாதங்களாகியும் அதைத் திறப்பதில் பிரச்சினை ஏற்பட்டதால் சிலை மூடப்பட்டுக் கிடந்தது. இந்த நிலையில் சேவாதளத்தைச் சேர்ந்தசார்லஸ், சீனிவாசன் ஆகியோர் தாங்களாகவே சனிக்கிழமை சிலையைத் திறந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
காலை 8 மணிக்கு இவர்கள் சிலையைத் திறந்து வைத்தனர். ஆனால் ஒரு மணி நேரத்திலேயே மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெரோம் ஆரோக்கியராஜின்ஆதரவாளர்கள் அங்கு வந்து சாக்குப் பையை போட்டு சிலையை மூடினர். இதனால் இரு தரப்பினரும் மோதிக் கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து கல்யாணராமன் கோஷ்டியினர் போலீஸில் புகார் கொடுத்துள்ளனர். இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி போலீஸார்சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இன்று திருச்சி வரும் ன்னாள் அமைச்சர் தங்கபாலுவுடன், சிலை திறப்பு குறித்துப் பேசி இன்னும் 15 நாட்களுக்குள் தலைவர்களை அழைத்து சிலையைத்திறப்பது குறித்து முடிவெடுக்க இரு கோஷ்டியினரும் ஒத்துக் காண்டனர்.
மூப்பனாருக்கு சிலை வைக்கும் வாழப்பாடி ஆதரவாளர்கள்:
திருச்சியில் இப்படி இருக்க, மறைந்த காங்கிரஸ் தலைவர் ஜி.கே.மூப்பனாருக்கு சிலை அமைக்கும் பணியில், அவரது பரம விரோதியாக இருந்த வாழப்பாடிராமமூர்த்தியின் ஆதரவாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மூப்பனாரும், வாழப்பாடியாரும் உயிருடன் இருந்தவரை எதிரும் புதிருமாக இருந்தவர்கள். இருவரும் ராசியாக இருந்ததாக சரித்திரமே இல்லை எனலாம்.
அப்படி மோதிக் கொண்டவர்களின் ஆதரவாளர்கள் இப்போது ஒன்று சேர்ந்து மூப்பனாருக்கு சிலை வைக்க முயற்சிகள் எடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் மூப்பனாருக்கு சிலை அமைக்கப்பட்டு வருகிறது. எட்டு அடி ஒரு அங்குலம் அளவில்அமைக்கப்படும் இந்த வெண்கலச் சிலையை சென்னையைச் சேர்ந்த பிரபல சிற்பி அமைத்து வருகிறார்.
வாழப்பாடியாரின் தீவிர ஆதரவாளராக ஒருகாலத்தில் விளங்கிய முன்னாள் மாநில காங்கிரஸ் செயலாளர் முத்தழகன்தான் இந்த சிலையை நிறுவ ஏற்பாடுகள்செய்து வருகிறார். மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜியை அழைத்து விரைவில் சிலையைத் திறக்கவுள்ளனர்.