சென்னையில் இன்னொரு ரெளடி போலீஸ் "என்கெளண்டரில்" சுட்டுக் கொலை
சென்னை:
சென்னையில் இன்ஸ்பெக்டர் உட்பட 4 போலீஸாரை அரிவாளால் தாக்கிவிட்டு தப்பி ஓடமுயன்ற பிரபல ரெளடி போலீஸாரால்சுட்டுக் கொல்லப்பட்டான்.
இந்த எண்கெளன்டர் தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
சென்னை பெரவள்ளூர் ராஜா தோட்டத்தை சேர்ந்தவன் ரமேஷ் (வயது 22). பிரபல ரெளடியான இவன் மீது சென்னையில் பலபோலீஸ் நிலையங்களில் கொலை, கொள்ளை உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.
ரமேஷ் மீது பல்வேறு புகார்கள் போலீஸுக்கு சென்றதால் அவனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். இந்த தண்டனைமுடிந்து சமீபத்தில் தான் இவன் விடுதலையானான். வெளியில் வந்த பிறகும் ரெளடி ரமேஷின் நடவடிக்கைகள் குறையவில்லை.
செம்பியம் பகுதியில் சமீபத்தில் ஒரு வீட்டில் 100 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் ரமேஷுக்குதொடர்பு இருப்பது போலீஸுக்கு தெரியவந்தது. இது தொடர்பாக போலீஸார் அவனை தேடிவந்தனர்.
நேற்றிரவு பெரவள்ளூரில் ஒரு வீட்டில் ரமேஷ் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்துகுற்றப்பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் ஜான் மில்லர் தலைமையில் 3 போலீஸார் அங்கு சென்றனர்.
ரமேஷை சுற்றிவளைத்து பிடிக்க முயன்றனர். அப்போது திடீரென சப்- இன்ஸ்பெக்டர் ஜான் மில்லரை அரிவாளால் வெட்டினான்.இதில் அவரது 2 கைகள் மற்றும் தலையில் அரிவாள் வெட்டு விழுந்தது.
சப்- இன்ஸ்பெக்டரை வெட்டிய ரமேஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். பலத்த காயமடைந்த சப்- இன்ஸ்பெக்டர் ஜான் மில்லர்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது தொடர்பாக கமிஷனர் நடராஜுக்கு தகவல் தரப்பட்டது. இதைத் தொடர்ந்து ரமேஷைப் பிடிக்க திரு.வி.க. நகர் இன்ஸ்பெக்டர்ராஜா, பெரவள்ளூர் சப்- இன்ஸ்பெக்டர் பூமாறன் மற்றும் போலீஸாரைக் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
ரமேஷை சுட்டுப் பிடிக்கவும் உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து ரமேஷை போலீசார் விடிய விடியத் தேடினர். இந் நிலையில் ரமேஷ் தனது கூட்டாளிகளுடன் புழல் இரட்டை ஏரிஅருகே உள்ள ஒரு லாரி செட்டில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து இன்று அதிகாலை 4 மணியளவில் அந்த லாரிசெட்டை போலீஸார் முற்றுகையிட்டனர்.
ரமேஷை சரணடையுமாறு எச்சரித்தனர்.
ஆனால் ரமேஷும் அவனது கூட்டாளிகளும் திடீரென போலீஸார் மீது தாக்குதல் நடத்தினர். அரிவாள்களால் அவர் தாக்கியதில்இன்ஸ்பெக்டர் ராஜா, சப்- இன்ஸ்பெக்டர்கள் பூமாறன், தீபக் குமார், ஏட்டு பரமசிவம் ஆகிய 4 பேருக்கும் அரிவாள் வெட்டுவிழுந்தது.
இதையடுத்து சப்- இன்ஸ்பெக்டர் தீபக் குமார் தன்னுடைய துப்பாக்கியால் ரமேஷை சுட்டார். ஏட்டு பாண்டியன் மற்றும் மோகன்ராஜா ஆகியோரும் சுட்டனர். உடலில் பல குண்டுகளை வாங்கிய ரமேஷ் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்தான். அவனுடன்இருந்த மற்ற 4 ரெளடிகள் தப்பி ஓடிவிட்டனர்.
அரிவாளால் வெட்டப்பட்ட இன்ஸ்பெக்டர் ராஜா, சப்- இன்ஸ்பெக்டர்கள் பூமாறன், தீபக் குமார், ஏட்டு பரமசிவம் ஆகிய 4 பேரும்சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கொல்லப்பட்ட ரெளடி ரமேஷின் உடல் பிரேத பரிசோதனைக்காகஅனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
இச் சம்பவம் குறித்து இணைக் கமிஷனர் சைலேந்திர பாபு கூறுகையில், ரமேஷ் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.கடந்த சில மாதங்களாக அவன் அட்டகாசம் அதிகரித்திருந்தது.
சமீபத்தில் நடந்த ஒரு கொள்ளையில் அவன் மீது சந்தேகம் இருந்தது. இது தொடர்பாக அவனை விசாரிக்க சென்ற போது தான்அவன் போலீஸார் மீது தாக்குதல் நடத்தினான் . இதனால் அவனிடமிருந்து தற்காத்துக் கொள்ள வேறு வழியில்லாமல் போலீஸார்அவனை சுட்டனர் என்றார்.
சமீப காலத்தில் தாதா வீரமணியும் பின்னர் வெங்கடேச பண்ணையாரும் போலீஸ் எண்கெளண்டரில் கொல்லப்பட்டதுநினைவுகூறத்தக்கது.