சுயமரியாதை திருமணங்கள்: கருணாநிதி கோரிக்கை
சென்னை:
சுயமரியாதைத் திருமணங்களுக்கு தேசிய அளவில் அங்கீகாரம் தரப்பட வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கைவிடுத்தார்.
மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் டி.ஆர்.பாலுவின் மகன் செல்வகுமார்-நேத்ரா ஆகியோரின் திருமணம் சென்னை ராஜாஅண்ணாமலைபுரத்தில் திருமண மண்டபத்தில் நடந்தது.
கருணாநிதியின் தலைமையில் சுய மரியாதைத் திருமணமாக இந் நிகழ்ச்சி நடந்தது. இது ஒரு காதல் திருமணமாகும். கருணாநிதிமங்கல நாணை எடுத்துத் தர, அதை மணமகன், மணமகளின் கழுத்தில் கட்டினார்.
பின்னர் மலர்ளைத் தூவி மணமக்களை வாழ்த்திவிட்டு கருணாநிதி பேசினார். அவர் கூறுகையில்,
எனக்கு முன்னாள் பேசியவர்கள் இந்தத் திருமணம் மிக வேகமாகவும், புதிய முறையிலும் இருந்ததாக ஆச்சரியப்பட்டனர்.
இது வேகமாக நடந்த திருமணமல்ல. மணமக்களும் காத்திருந்தனர். அவர்களின் காதலும் காத்திருந்தது. வெளி மாநிலங்களைச்சேர்ந்தவர்களுக்கு இந்த சுயமரியாதைத் திருமணம் வித்தியாசமாக இருந்ததாகக் கூறினர்.
தந்தை பெரியார் அறிமுகப்படுத்தி, அண்ணாவால் இந்தத் திருமண முறைக்கு சட்டவடிவம் தரப்பட்டது. இத்தகைய மறுமலர்ச்சிபெற்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு தான். அந்த மறுமலர்ச்சியை வழிவகை செய்தது திராவிட இயக்கமும் திமுகவும் தான்.
சங்க இலக்கிய காலத்தில் இந்தத் திருமண முறை தான் இங்கு நடைமுறையில் இருந்தது. பின்னர் புராணிக, வைதீக, ஐதீகமுறைகள் படையெடுத்து தமிழக கலாச்சாரத்துக்கு அறைகூவல் விடுத்தன.
தமிழர்களுக்கு அறிவூட்ட பெரியார் தோன்றினார். அவராலும் அண்ணாவாலும் இந்தத் திருமண முறை மீண்டும் வந்தது,பரவியது. அறிவுப் புரட்சி, சமுதாயப் புரட்சி, கலாச்சாரப் புரட்சியில் வெற்றி வாகை சூடிய மாநிலம் தமிழகம்.
எனவே தான் சாட்டர்ஜி, நாயுடு, ஷிண்டே போன்றவர்களுக்கு இந்த திருமண முறை புதிதாகத் தோன்றுகிறது. இதை மற்றமாநிலங்களும் பின்பற்ற தலைப்பட்டிருக்கின்றன.
இப்போது சுயமரியாதைத் திருமணம் தமிழ்நாட்டில் மட்டுமே சட்டப்பூர்வமாக இருக்கிறது. பொதுவுடமை இயக்கத்தின் மூத்ததலைவர் சாட்டர்ஜி. பொதுவுடமை இயக்கத்துக்கும் பகுத்தறிவு இயக்கத்துக்கும் இம்மியளவுக்கும் வேறுபாடு இல்லை.
இதனால் சுயமரியாதைத் திருமண முறை அகில இந்திய அளவில் செல்லுபடியாகும் நிலை வர வேண்டும். அதற்கு சாட்டர்ஜிபோன்றவர்களின் பரிந்துரை, கருத்துக்கள் தேவை என்றார்.
முன்னதாகப் பேசிய சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, இங்கே இந்த மண்டபம் முழுமையாக நிரம்பியிருப்பதைப் பார்த்து மகிழ்ச்சிஅடைகிறேன். இது போல நாடாளுமன்றமும் நிரம்பாதா என்று ஏங்குகிறேன், என எதிர்க் கட்சிகளின் புறக்கணிப்பைசமயோஜிதமாக டச் செய்தார்.