ஆட்சித் தலைவரா, ஆளுங்கட்சித் தலைவரா?
சென்னை:
தேர்தல் ஆணைய விதிகளைச் சுட்டிக் காட்டி திமுகவினரை மட்டும் அதிகாரிகளும் போலீசாருக்கும் கட்டுப்படுத்தி வருவதாகவும்,அதிமுகவினரை கடிவாளம் இல்லாத குதிரைகள் மாதிரி நடந்து கொள்ள அனுமதித்திருப்பதாகவும் திமுக தலைவர் கருணாநிதிகுற்றம் சாட்டியுள்ளார்.
குறிப்பாக காஞ்சி மாவட்ட ஆட்சித் தலைவரும் காவல்துறை தலைவரும் அதிமுகவினருக்கு சாதகமாகவும், திமுகவினருக்குஎதிராகவும் நடப்பதாக புகார் எழுந்துள்ளது. தொகுதியில் வெளியாட்கள் தங்கக் கூடாது என்ற தேர்தல் விதியைஅமலாக்குவதாகக் கூறி திமுகவினரை மட்டும் போலீசாரைக் கொண்டு அவர் வெளியேற்ற முயல்வதாகக் கூறப்படுகிறது.
இதை மத்திய அமைச்சர் இளங்கோவனும் கண்டித்துள்ளதோடு, அதிகாரிகள் நியாயமாக நடக்காவிட்டால் மத்திய அரசு தலையிடவேண்டி வரும் என எச்சரித்துள்ளார்.
தேர்தல் விதிகளை திமுக மட்டுமே கடைபிடிக்க வேண்டும் என்பது போலவும், அதிமுகவினர் கடிவாளமில்லாத குதிரையாகசுற்றலாம் என்பது போலவும் மாவட்ட அளவிலான அதிகாரிகள் நடந்து கொள்ள ஆரம்பித்துள்ளனர். தங்களது ஜபர்தஸ்துகளைதிமுக கூட்டணியிடம் மட்டுமே காட்டுகின்றனர்.
இது தவறு. பாரபட்சமில்லாமல் நடு நிலையுடன் அதிகாரிகள் நடந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
இளங்கோவன் எச்சரிக்கை:
இந் நிலையில் இந்தத் தொகுதியில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் இளங்கோவன் பேசுகையில்,
காஞ்சிபுரம் கலெக்டரின போக்கு சரியில்லை. அவர் ஆட்சித் தலைவர் தான். ஆளுங் கட்சித் தலைவர் மாதிரி செயல்படக் கூடாது.அவர் தவறு செய்வதை மாநில அரசு தூண்டிவிடலாம். இதை மத்திய அரசு வேடிக்கை பார்க்காது. ஐஏஎஸ் அதிகாரி என்றால்நியாயமாக நடக்க வேண்டும். இல்லாவிட்டால் மத்தியில் இருந்து நடவடிக்கை வரும்.
திமுகவினரை மட்டும் காஞ்சியில் இருந்து வெளியேற சொல்கிறார்கள். காஞ்சி மண்ணின் சொந்தக்காரர்கள் திமுகவினர்.அவர்களை வெளியேறச் சொல்ல யாருக்கும் உரிமையில்லை.
மத்தியில் உள்ள 12 அமைச்சர்களும் லாயக்கில்லாதவர்கள் என்று ஜெயலலிதா பேசுகிறார். அவரது அமைச்சர்கள் ரொம்பலாயக்கா? ஜெயலலிதாவின் காலில் விழுவதைத் தவிர அவர்கள் என்ன வேலை பார்த்தார்கள்.
சென்னையில் குழந்தைகளை கடத்துகிறது ஒரு கும்பல். குழந்தைகளைக் காப்பாற்றக் கூட ஜெயலலிதா அரசால் முடியவில்லை.இவர் எங்களைப் பார்த்து என்ன சாதனை செய்தோம் என்று கேட்கிறார்.
எங்கள் சாதனைகளை பட்டியலிடுகிறோம். எங்கே, உங்கள் அமைச்சர்களையும் அது மாதிரி சாதனைப் பட்டியல் சொல்லச்சொல்லுங்கள்.. கேட்போம் என்றார்.
திமுக தலைமைக் கழகச் செயலாளர் துரைமுருகன் பேசுகையில்,
திமுகவினரை மட்டும் காஞ்சியை விட்டு வெளியேறச் சொல்லி ஆர்டர் போடுகிறார்கள். அதிமுகவினர் மட்டும் இருக்கலாமாம்.இந்தத் தொகுதியை விட்டு 12 அதிமுக அமைச்சர்களும் வெளியேறும் வரை திமுககாரன் ஒருத்தன் கூட வெளியேற மாட்டான்.உங்களால் முடிந்ததைச் செய்து கொள்ளுங்கள் என்றார்.
காஞ்சிபுரம் கலெக்டர் மீது தேர்தல் சிறப்புப் பார்வையாளர் கே.ஜே. ராவிடம் திமுக புகார் தர முடிவு செய்துள்ளது.