யுஎஸ்: 14,000 அடி உயரத்திலிருந்து பாராசூட்டில் குதித்த 58 வயது கோவை பெண்
அட்லாண்டா:
அமெரிக்காவில் 14,000 அடி உயரத்திலிருந்து பாராசூட்டில் குதித்து கோவையை சேர்ந்த 58 வயது ஆசிரியை சாதனை படைத்துள்ளார்.
கோவையை சேர்ந்தவர் ஹரிகரன். இவரது மனைவி ஸ்வர்ணகுமாரி (வயது 58). கோவையிலுள்ள சிஎஸ்ஐ பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியையாக இருந்து ஓய்வு பெற்றவர்.
இவரது மகன் ஹரீஸ்வரன், அமெரிக்காவிலுள்ள டென்னசி பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி கல்வி மேற்கொண்டு வருகிறார். அவரது மனைவியும் அதே பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறார்.
இந் நிலையில் தனது மகன் மற்றும் மருமகளை பார்ப்பதற்காக ஸ்வர்ணகுமாரி சமீபத்தில் அமெரிக்கா சென்றார். அங்கு பலர் விமானத்தில் இருந்து பாராசூட்டில் குதிப்பதை பார்த்த ஸ்வர்ணகுமாரிக்கும் பாராசூட்டில் குதிக்கும் ஆவல் ஏற்பட்டது.
தனது மகனிடம் தன்னுடைய ஆவலை கூறினார். அவரும் தனது தாயின் பாராசூட் ஆவலை நிறைவேற்ற ஏற்பாடு செய்தார். இதற்காக பாரா ஜம்ப்பிங் பயிற்சியில் ஸ்வர்ணகுமாரி சேர்ந்தார்.
பயிற்சிக்குப் பின் ஸ்வர்ணகுமாரி அட்லாண்டா நகர் அருகே உள்ள தாமஸ்டன் என்ற இடத்தில் விமானம் 14,000 அடி உயரத்தில் பறந்தபோது அதிலிருந்து பாராசூட் மூலம் ஸ்வர்ணகுமாரி குதித்தார். அவருடன் பயிற்சியாளர் ஜேக் ஹாமரும் பாராசூட்டில் குதித்தார்.
தனது பாராசூட் அனுபவம் குறித்து ஆசிரியை ஸ்வர்ணகுமாரி கூறுகையில், இந்த பயிற்சியை இதற்கு முன் பெற்றதில்லை. அமெரிக்காவில் பலர் மிக சாதாரணமாக பாராசூட்டில் குதிக்கும் போது எனக்கும் அந்த ஆவல் ஏற்பட்டது.
இதன் பிறகு சிறிது பயிற்சி பெற்றேன். பின்னர் என்னை விமானத்தில் அழைத்து சென்றார்கள். அது 10 பேர் மட்டுமே அமரக்கூடிய சிறிய விமானமாகும்.
இதன் பிறகு சுமார் 14 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து நான் பாராசூட்டில் குதித்தேன். என்னுடன் பயிற்சியாளர் ஜேக் ஹாமரும் ஒரே பாராசூட்டில் குதித்தார். விமானத்தில் இருந்து குதிக்கும் போது ஒரு சில விநாடிகள் மட்டும் பயமாகவும், பதட்டமாகவும் இருந்தது. அதற்குப் பிறகு ஒன்றும் தெரியவில்லை.
3 நிமிடத்திற்குள் தரையை தொட்டுவிட்டேன். பாராசூட்டில் பறந்த அனுபவத்தை வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை. நேரில் அதை அனுபவித்தால் மட்டுமே அது புரியும்.
பாராசூட்டில் இருந்து குதிக்கும் போது உடலில் எந்த ஆபரணங்களும் அணிந்திருக்கக் கூடாது. இதற்காக தனியாக வடிவமைக்கப்பட்ட ஆடையைத் தான் அணியவேண்டும்.
விமானத்தில் இருந்து குதிக்கும் போது காற்றின் வேகம் மிக அதிகமாக இருக்கும். மணிக்கு சுமார் 192 கிமீ வேகத்தில் புவி ஈர்ப்பு விசை நம்மை பூமியை நோக்கி இழுக்கும். அப்போது மிகவும் பயமாக தோன்றும்.
தனியாக குதிக்க வேண்டுமென்றால் அதற்கு தீவிர பயிற்சி எடுக்க வேண்டும்.
ஆசியாவிலேயே அதிக வயதில் பாராசூட்டில் இருந்து குதித்த ஒரே பெண் நானாகத்தான் இருப்பேன் என்று நினைக்கிறேன் என்றார் கண்களில் பெருமையும் குதூகலமும் பொங்க.