மதமாற்ற தடை சட்டம் அறவே நீக்கம்: ஜெ. விளக்கம்
சென்னை:
கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் அறவே நீக்கப்பட்ட விட்டது. இப்போது அது எந்த விதத்திலும் அமலில் இல்லை என்று முதல்வர்ஜெயலலிதா கூறியுள்ளார்.
மத்தியில் ஆட்சியில் இருந்த பாஜகவுடன் நெருக்கமாக இருந்த ஜெயலலிதா மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தார். இதைத்தொடர்ந்து நடந்த மக்களவைத் தேர்தலில் வரலாறு காணாத தோல்வியைச் சந்தித்தார்.
இந் நிலையில் இதுதொடர்பாக இன்று ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில்,
கடந்த 2002ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் கடந்த ஆண்டு மே மாதம் 18ம் தேதி பிறப்பிக்கப்பட்டஅவசரச் சட்டத்தின் மூலம் அறவே நீக்கப்பட்டு விட்டது.
ஆனால் வேண்டுமென்றே உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்ப சிலர் முயன்று வருகின்றனர். இதனால், இந்த சட்டம் இருக்கிறதா,இல்லையா என்ற குழப்பமடைந்த பலர் அரசிடமே விளக்கம் கேட்டு கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அனைத்து சமூக மக்களிடையேயும் மத நல்லிணக்கத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்தான் தமிழக அரசு கடந்த 2002ம்ஆண்டு கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை இயற்றியது (இதன்மூலம் எப்படி நல்லிணக்கம் வரும் என்பது ஜெயலலிதாவுக்கேவெளிச்சம்).
அப்போதே, இந்தச் சட்டம், சிறுபான்மை மக்களின் சுதந்திரத்தை எள்ளளவும் பாதிக்காது என்பதை தெளிவுபடுத்தினேன், உறுதியளித்தேன்.இந்த சட்டம் கொண்டு வரப்பட்ட நாள் முதல், நீக்கப்பட்ட நாள் வரை இச்சட்டத்தின் கீழ் ஒரு வழக்குக் கூட பதிவாகவில்லை என்பதேஇதற்கு தக்க சாட்சியமாகும். (அப்புறம் எதற்கு சட்டத்தைக் கொண்டு வந்தார்?).
எனது அரசு எப்போதுமே மதச்சார்பற்ற அரசு, சிறுபான்மை மக்களின் உரிமைகளை கட்டிக் காக்கும் அரண் போல அமைந்து, அனைத்துசிறுபான்மை மக்களின் உரிமைகள், நலன்களைக் காப்பதில் வலிமை மிக்க காவலனாக செயல்பட்டு வருகிறது.
சிறுபான்மை மக்களின் நல்வாழ்வுக்கும், பாதுகாப்புக்கும் எனது அரசு முழு உத்தரவாதம் அளிப்பதைப் பொறுக்க முடியாத சில தீய சக்திகள்,மக்களிடையே தவறான பிரசாரம் செய்து வந்தன.
இந்த தீய சக்திகளின் திட்டமிட்ட தவறான பிரசாரத்தால் அமைதிக்கு ஊறு விளைவிக்கக் கூடாது என்பதாலும், பல்வேறு சிறுபான்மை சமூகதலைவர்கள் கேட்டுக் கொண்டதன் பேரிலும், இந்த சட்டம் உடனடியாக ரத்து செய்யப்படும் என கடந்த ஆண்டு மே 18ம் தேதிஅறிவித்தேன். (அதாவது மக்களவைத் தேர்தலில் மண் கவ்விய பிறகு). அன்றே இதுதொடர்பான அவரசச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
ஆனால் இந்த சட்டம் இன்னும் ரத்தாகவில்லை என சிலரால் தவறான பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. இது தவறானது,கண்டனத்துக்குரியது. கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் இப்போது எந்த ரூபத்திலும் அமலில் இல்லை.
பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். வழியில் செயல்பட்டு, திராவிடப் பாரம்பரியத்தை பேணிக் காத்து வருகிறது எனது அரசு. என்றைக்கும்சிறுபான்மை மக்களின் பாதுகாவலனாக திகழும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.