பீகார் சட்டசபை கலைப்பு: லாலு வரவேற்பு- பாஜக கண்டனம்
டெல்லி:
பீகார் சட்டசபை நேற்றிரவு கலைக்கப்பட்டது. அங்கு மறுதேர்தல் நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவை மத்திய அமைச்சர்லாலு பிரசாத் வரவேற்றுள்ளார்.
சமீபத்தில் பீகாரில் நடைபெற்ற தேர்தலில் லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் உட்பட எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.லாலு எவ்வளவோ முயற்சி செய்தும் அவரால் ஆட்சியமைக்க முடியவில்லை.
இந் நிலையில் பீகார் சட்டசபையை கலைக்க குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்வது என பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில்நேற்றிரவு கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தற்போது ரஷ்யாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு மத்திய அமைச்சரவையின் முடிவு உடனடியாகதெரிவிக்கப்பட்டது. அதை ஏற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர் பீகார் சட்டசபையை கலைத்து உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து அங்கு மீண்டும் தேர்தல் நடத்தப்படும்.
பீகார் சட்டசபை கலைக்கப்பட்டதை அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், மத்திய ரயில்வே அமைச்சருமான லாலு பிரசாத்வரவேற்றுள்ளார். இது மிகவும் சரியான முடிவு என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் இதை பாஜக வன்மையாக கண்டித்துள்ளது. பீகார் சட்டசபை கலைக்கப்பட்டது ஒரு ஜனநாயக படுகொலையாகும் என்றுஅக்கட்சியின் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.