மெரீனா நீச்சல்குளம்: பெண்களுக்கு தனி நேரம்
சென்னை:
சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள அரசு நீச்சல் குளத்தில், தினசரி காலை 8 மணி முதல் 10 மணி வரை பெண்கள் மட்டும்குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மெரீனா கடற்கரையில் அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள அண்ணா நீச்சல் குளம் உள்ளது. சமீபத்திய சுனாமி தாக்குதலில் நீச்சல்குளம் சேதமடைந்தது. இதையடுத்து நீச்சல் குளம் சீரமைக்கப்பட்டு, சரி செய்யப்பட்டது.
இருப்பினும் பெரும்பாலும் ஆண்களே நீச்சல் குளத்தை அதிகம் பயன்படுத்துகின்றனர். பெண்களும் இந்த நீச்சல் குளத்தைப்பயன்படுத்த தனி வசதி செய்து தர வேண்டும் என்று மாநகராட்சிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதுகுறித்து அறிந்த முதல்வர் ஜெயலலிதா, தற்போது பெண்களுக்கென சிறப்பு வசதியை அறிவித்துள்ளார். அதன்படி காலை 8மணி முதல் 10 மணி வரை பெண்கள் மட்டுமே நீச்சல் குளத்தில் குளிக்க அனுமதிக்கப்படுவர். அந்த குறிப்பிட்ட நேரத்தில் ஆண்பணியாளர்கள் நீச்சல் குள வளாகத்திற்குள் இருக்கக் கூடாது. பெண் பணியாளர்களே பணியில் இருக்க வேண்டும்.
வருகிற 2ம் தேதி முதல் இந்த புதிய வசதி அமலுக்கு வருகிறது என்று முதல்வர் ஜெயலலிதா தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.