கலெக்டர் ஆவதே லட்சியம்: முதல் மாணவி ரம்யா
சாத்தூர்:
கலெக்டர் ஆவது தான் தனது வாழ்க்கையின் லட்சியம் என்கிறார் 10ம் வகுப்பு தேர்வில் 490 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம்பிடித்த சாத்தூர் மாணவி ரம்யா.
10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாயின. வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சிபெற்றுள்ளனர். மொத்தம் 77.8 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவிகள் 80.8 சதவீதமும், மாணவர்கள் 75 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இது தவிர முதல் 3 இடங்களை மாணவிகளே தக்க வைத்துள்ளனர். சாத்தூர் இந்து நாடார் ஹார்வி பெண்கள் மேல்நிலைப் பள்ளிமாணவி ரம்யா, 490 மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்திலேய முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.
முதலிடத்தை பிடித்துள்ள சாத்தூர் பள்ளி மாணவி ரம்யா கூறுகையில், இரவு தூக்கம் வரும்போது படுக்க சென்று விடுவேன்.அதிகாலையில் 4 மணிக்கு எழுந்து படிப்பேன். டி வி சீரியல்களை நான் பார்ப்பதில்லை.
செய்தி மற்றும் பொது விஷயங்களை மட்டுமே பார்ப்பேன். மருத்துவம் படித்து கலெக்டர் ஆவது தான் எனது வாழ்க்கையின்லட்சியம் என்கிறார் ரம்யா.