சென்னையில் இன்று நர்சரி பள்ளி தாளாளர்கள் கூட்டம்
சென்னை:
நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளிகளின் தாளாளர்கள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. இதில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும்என்று தமிழக நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மற்றும் மேல்நிலை பள்ளிகளின் நிர்வாகிகள் சங்க பொதுச் செயலாளர் கிறிஸ்துதாஸ் கூறினார்.
கும்பகோணம் சம்பவத்திற்கு பிறகு தீ தடுப்பு நடவடிக்கை மற்றும் அடிப்படை வசதிகள் செய்யாத நர்சரி பள்ளிகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் 2000 நர்சரி பள்ளிகள் செயல்பட முடியாத நிலையில் உள்ளன.
இது தொடர்பாக தொடக்க கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்துகலெக்டர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். உதவி தொடக்க கல்வி அலுவலகத்திற்கும் இதுகுறித்து தனியாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அருகிலுள்ள பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க முடியவில்லை என்று அங்கீகாரம் பெறாத பள்ளிகளில் படித்த குழந்தைகளின் பெற்றோர் புகார் கூறினால்,உடனே அவர்களை பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு கூறும் நிபந்தனைகளை நிறைவேற்ற கால அவகாசம் தரும்படி அங்கீகாரம் பெறாத சில பள்ளிகள் விண்ணப்பித்துள்ளன. அங்கீகாரம் கோரி விண்ணப்பித்தபள்ளிகளுக்கு சென்று, விதிமுறைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் நலனை காக்கவும், பள்ளியில் சேர்ப்பதற்கும் முழு முன்னுரிமை அளிக்கப்படும். அங்கீகாரம் பெறாமல் பள்ளிகள் இயங்கினால் அதுகுறித்து தொடக்ககல்வித்துறைக்கு பொதுமக்கள் புகார் கூறலாம். இவ்வாறு தொடக்க கல்வித்துறை அதிகாரிகள் கூறினர்.
தமிழக நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன், மேல்நிலைப் பள்ளி நிர்வாகிகள் சங்கத்தின் பொதுச் செயலர் கிறிஸ்துதாஸ் கூறுகையில், அங்கீகாரம் இல்லாத பள்ளிகளைவலுக்கட்டாயமாக மூடச் சொல்வது தவறானது. அவ்வாறு அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் தனித்தனியாக கோர்ட்டில் முறையிடலாம் என்று கூடுதல் அட்வகேட்ஜெனரல் கூறியுள்ளார்.
குறைந்த அளவு மக்கள் தொகை கொண்ட கிராமங்களில் பள்ளிகள் இல்லாத நிலை உள்ளது. அதுபோன்ற இடங்களில் செயல்படும் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளைமூட வேண்டும் என்று கூறுவதால் மாணவர்கள் தான் பாதிக்கப்படுவர்.
5ம் தேதி (இன்று) அனைத்து நர்சரி பள்ளிகளின் தாளாளர்கள் கூட்டம் சென்னை தியாகராய நகரில் பிரகாச சாலை பாலமந்திர் ஹாலில் நடக்கிறது. இதில் ஆயிரத்து500க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பார்கள் என்று நம்புகிறோம். இந்த கூட்டத்தில் அடுத்தகட்ட அணுகுமுறை குறித்து முடிவு எடுக்கப்படும்என்றார்.