திருட்டு போலீஸ் வீடுகளில் போலீஸ் சோதனை
மதுரை:
மதுரை "திருட்டு போலீஸாரின் வீடுகளில் சோதனை நடத்த திருமங்கலம் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது. இதைத் தொடர்ந்து 3 பேரின் வீடுகளிலும் போலீஸார்சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் நகைக்கடை ஊழியர்களை தாக்கி கொள்ளையடிக்க முயன்றதாக கைது செய்யப்பட்ட மதுரை போலீஸார்களான மீனாட்சி சுந்தரம், பன்னீர்செல்வம்,பாஸ்கரன் ஆகியோர்கள் குறித்து தினமும் பரபரப்பு தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இவர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடந்த கொள்ளை சம்பவங்களில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. மேலும் இவர்களுக்கு ஹவாலாகும்பலுடன் தொடர்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
போலீஸ் கொள்ளையர்கள் விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து தீவிர விசாரணை நடத்த சென்னை உதவிபோலீஸ் கமிஷனர் தயாநிதி தலைமையில் ஒரு தனிப்டையும், இன்ஸ்பெக்டர் அமிர்தலிங்கம் தலைமையில் இன்னொரு தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.
இவர்கள் மதுரையில் முகாமிட்டு "திருட்டு போலீஸார் 3 பேரும் பணிபுரிந்த இடங்கள், அவர்களது குடும்பப் பின்னணி மற்றும் அவர்கள் யார் யாருடன் தொடர்புவைத்திருந்தார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந் நிலையில், 3 போலீஸாரின் வீடுகளிலும் சோதனை நடத்த அனுமதி கோரி தனிப்படை போலீஸார் இன்று திருமங்கலம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.போலீஸாரின் கோரிக்கையை பரிசீலித்த நீதிபதி செல்லப்பாண்டியன் சோதனைக்கு அனுமதி அளித்தார்.
இதற்கிடையே மதுரை போலீஸ் சூப்பிரண்ட் சுந்தரேசன் கூறுகையில், 3 பேரும் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் மீதான புகார்கள் உறுதிசெய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்படுவார்களா என்பது குறித்து தனிப்படையினரின் விசாரணைக்குப்பின்னர் தான் முடிவு செய்யப்படும் என்றார்.