போலி வாக்காளர் : ஓ.பி. மனு பெஞ்சுக்கு மாற்றம்
சென்னை:
போலி வாக்காளர் பிரச்சினை தொடர்பாக அதிமுக மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கோரி மாநலபொதுப்பணித்துறை அமைச்சரும் அதிமுக தேர்தல் பணிக்குழு தலைவருமான ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்துள்ள மனுவை,மேல் விசாரணைக்காக டிவிஷன் பெஞ்சுக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
போலி வாக்காளர்கள் விவகாரம் தொடர்பாக அதிமுக மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றுஉத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர் செல்வம் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவை நீதிபதி பி.டி.தினகரன் விசாரித்து வந்தார். நேற்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்குவந்தபோது, இந்த ரிட் மனு, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 31வது பிரிவு குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.
இதை பொது முக்கியத்துவம் வாய்ந்த வழக்காக நீதிமன்றம் கருதுகிறது. எனவே பொதுவான நோக்கிலும், அதிமுக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாக கருதுவதாலும், இதை தனி நீதிபதி விசாரிப்பதை விட டிவிஷன் பெஞ்ச்விசாரணைக்கு விடுவதே சிறந்தது என கருதுகிறேன்.
எனவே இந்த வழக்கை டிவிஷன் பெஞ்சுக்கு மாற்றுகிறேன் என்று உத்தரவிட்டார் தினகரன்.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கு தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூவிடம் அனுப்பப்பட்டுள்ளது. அவர் வழக்கைடிவிஷன் பெஞ்சுக்கு மாற்றுவார்.
இதற்கிடையே, போலி வாக்காளர் விண்ணப்பங்களைக் கொடுத்தவர்கள் மீது, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 155, 200வதுபிரிவுகளின் கீழ் நீதிமன்ற நடவடிக்கையை மேற்கொள்ள தேர்தல் ஆணையத்திற்கு உரிமை உள்ளது.
இதைத் தவிர வேறு நடவடிக்கையில் தேர்தல் ஆணையம் தற்போதைக்கு ஈடுபடக் கூடாது என்றும் மற்றொரு உத்தரவில் நீதிபதிபி.டி.தினகரன் உத்தரவிட்டார்.