மேட்டூர் அணை ஒரு வாரத்தில் நிரம்பும்! மகிழ்ச்சியில் விவசாயிகள்
சேலம்:
கர்நாடகத்தின் இரு முக்கிய அணைகளிலிருந்து மொத்தமாக 1 லட்சத்து 40,000 கன அடி நீர் மேட்டூர் அணைக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் இன்னும் ஒரே வாரத்தில் மேட்டூர் அணை தனது முழுக் கொள்ளளவை எட்டி விடும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடகத்தில் தென் மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. வரலாறு காணாத வகையில் மழை பெய்து வருவதால், காவிரிஉற்பத்தி தலமான குடகு மாவட்டத்தில் உள்ள அனைத்து குட்டி அணைகளும் நிரம்பியுள்ளன.இந்த அணைகளிலிருந்து அதிக அளவிலான தண்ணீர் கிருஷ்ணராஜசாகர் அணைக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. இதன்காரணமாக கிருஷ்ணராஜ சாகர் அணை முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. இதன் காரணமாக கிருஷ்ணராஜசாகர் அணைபாதுகாப்பைக் கருதி திறந்து விடப்பட்டுள்ளது.
இந்த அணைக்கு தற்போது 96,000 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையிலிருந்து 1லட்சம் கன அடி நீர்வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்தத் தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டுள்ளது.
இதேபோல கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கன மழை பெய்து வருவதால் கபினி அணைக்கும் தொடர்ந்து அபரிமிதமானநீர் வரத்து உள்ளது. கபினி அணைக்கு தற்போது விநாடிக்கு 39,195 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையிலிருந்துவிநாடிக்கு 39,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்தத் தண்ணீரும் மேட்டூருக்கே வந்து கொண்டுள்ளது. இரு அணைகளிலும் சேர்த்து மொத்தம் 1லட்சத்து 40,000 கன அடி நீர்தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்றுஇரவு முதல் அதிகமாக இருக்கும்.
எனவே இன்னும் ஒரே வாரத்தில் மேட்டூர் அணை தனது முழுக் கொள்ளளவான 124 அடியை எட்டி விடும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடகத்தின் மற்ற இரண்டு அணைகளான ஹேமாவதி, ஹோரங்கி ஆகிய அணைகளும் நிரம்பிவிட்டன.
இதில் ஹேமாவதி அணையிலிருந்து விநாடிக்கு 1லட்சத்து 1000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நீர்,கிருஷ்ணராஜசாகர் அணைக்கு வந்து கொண்டுள்ளது. அதேபோல ஹோரங்கி அணையிலிருந்து திறந்து விடப்பட்டுள்ள 20,000கன அடி நீரும் கிருஷ்ணராஜசாகர் அணைக்கு வந்து கொண்டுள்ளது.
மேட்டூர் அணையில் தற்போது 87 அடி நீர் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 40,000 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.அணையிலிருந்து விநாடிக்கு 12,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
மேட்டூர் அணைக்கு அதிக அளவில் நீர் வந்து கொண்டிருப்பதாலும், அணை நிரம்பப் போகும் நாள் மிக விரைவில்தெரிவதாலும், காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சம்பா மற்றும் தாளடிப் பயிரை சிறப்பாக சாகுபடி செய்ய அவர்கள் தயாராகி விட்டனர். இதற்கிடையே இன்னும் ஓரிருநாட்களில் மேட்டூர் அணையைத் திறக்கும் நல்ல செய்தியை தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிடுவார் என விவசாயிகள்எதிர்பார்ப்புடன் உள்ளனர்.