நானாவதி விவகாரம்: ஜகதீஷ் டைட்லர் ராஜினாமா
டெல்லி:
நானாவதி கமிஷன் அறிக்கை விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் பதவியிலிருந்து ஜகதீஷ் டைட்லர் நேற்று இரவுராஜினாமா செய்தார். ராஜினாமாவை குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஏற்றுக் கொண்டார்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்ட சம்பவத்தையொட்டி சீக்கியர்களுக்கு எதிராக ஏற்பட்ட கலவரத்தில் சுமார்3000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இந்த கலவரம் குறித்து விசாரணை நடத்த நீதிபதி நானாவதி தலைமையிலானகமிஷனை கடந்த 2000ம் ஆண்டு பாஜக தலைமையிலான அர சு அமைத்தது.இந்த கமிஷனின் அறிக்கையில் மத்திய அமைச்சர் ஜகதீஷ் டைட்லர் மற்றும் சில காங்கிரஸார் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.இதைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் ஜகதீஷ் டைட்லர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாஜகதலைமையிலான எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் ரகளையில் ஈடுபட்டன.
ஆளும் கூட்டணியிலுள்ள கம்யூனிஸ்ட் கட்சியும் இதே கோரிக்கையை வலியுறுத்தியது. இதனால் மத்திய அரசுக்கு கடும்நெருக்கடி ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து நேற்று பாராளுமன்றம் தொடங்குவதற்கு முன்னதாக டைட்லர், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துபேசினார். அப்போது தற்போது ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழ்நிலையை சுட்டிக்காட்டி டைட்லர் ராஜினாமா செய்வதைத் தவிரவேறு வழியில்லை என்று பிரதமர் கூறியதாக தெரிகிறது.
இதன் பிறகு நேற்று மாலையில் டைட்லர், சோனியா காந்தியையும் சந்தித்து பேசினார். இதனால் டைட்லர் பதவியை ராஜினாமாசெய்வார் என்ற பேச்சு எழுந்தது.
இந் நிலையில் நேற்று இரவு டைட்லர் தனது பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை சோனியா காந்தியிடமும்,பிரதமரிடம் அவர் கொடுத்தார். பின் அந்தக் கடிதத்தை பரிந்துரை செய்து குடியரசுத் தலைவர் கலாமுக்கு பிரதமர் அனுப்பிவைத்தார்.
ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டதாக குடியரசுத் தலைவர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜகதீஷ் டைட்லரின் ராஜினாமவை பாஜக, அகாலி தளம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் வரவேற்றுள்ளன.