வீராணம் நீரில் சாயக் கழிவு நீர் கலப்பு?
கடலூர்:
சென்னைக்குக் குடிநீர் வழங்கும் வீராணம் ஏரி நீரில், ஒரத்துப்பாளையம் அணையிலிருந்து திறந்து விடப்பட்டுள்ள சாயக் கழிவுநீர் கலந்து வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து வீராணம் ஏரி நீரை ஆய்வுக்காக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியஅதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர்.
காவிரியில் தற்போது தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்தத் தண்ணீரின் ஒரு பகுதி கடைமடை பகுதியான வீராணம் ஏரிக்குவந்து சேருகிறது. இதனால் வீராணம் ஏரியில் அதிக அளவில் தண்ணீர் சேர்ந்து வருகிறது.காவிரியில் தண்ணீர் அதிகம் ஓடுவதால், சாயக்கழிவு நீர் தேங்கியுள்ள ஒரத்துப்பாளையம் அணை திறந்து விடப்பட்டுள்ளது.அதிலிருந்து வெளியாகும் சாயக் கழிவு கலந்த அசுத்த நீர் காவிரியாற்றில் கலந்து விடப்படுகிறது.
இந்த அசுத்த நீர் தற்போது வீராணம் ஏரிக்கு வருவதாக செய்தி கிளம்பியுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்துகடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ககன்தீப் சிங் பேடியிடம் கேட்டபோது, வீராணம் ஏரி நீர் அசுத்தமடைந்துள்ளதா என்பதைஇப்போது கூற முடியாது.
ஏரி நீரை ஆய்வுக்காக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய நிபுணர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். இன்னும் 3 நாட்களில்அதுகுறித்த ஆய்வறிக்கை எங்களிடம் வழங்கப்படும். அதன் பிறகே வீராணம் ஏரி அசுத்தமடைந்துள்ளதா என்பது தெரியவரும். இப்போதைக்கு ஏரியில் சாயக் கழிவுகள் ஏதும் கலக்கவில்லை என்று உறுதியாக கூறுகிறேன் என்றார் பேடி.
ஒரத்துப்பாளையம் அணையிலிருந்து நொய்யல் ஆற்றின் மூலமாக காவிரியில் திறந்து விடப்படும் அசுத்த நீரின் அளவு 1:20விகிதமாக உள்ளது.
நீர் மாசுபடவில்லை: அதிகாரிகள் விளக்கம்
இதற்கிடையே வீராணம் ஏரி நீர் மாசுபடவில்லை என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அதிகாரப்பூர்வமற்றவகையில் விளக்கியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 20,000 கன அடி நீர்திறந்து விடப்பட்டால், ஒரத்துப்பாளையம் அணையிலிருந்து விநாடிக்கு 1000 கன அடிநீர் மட்டுமே திறக்கப்படும்.
இந்த நீர் ஒரு கிலோமீட்டர் தொலைவிலேயே மாசு அகற்றப்பட்டு சாதாரண தண்ணீர் ஆகி விடும். எனவே இந்தக் கழிவு கலந்தநீர் வீராணம் ஏரிக்கு வர வாய்ப்பே இல்லை. சென்னைக்கு வீராணம் ஏரியிலிருந்து எடுக்கப்படும் நீர் தரமானதாகவேதொடர்ந்து வந்து கொண்டுள்ளது.
எனவே இதுகுறித்து பொதுமக்கள் மத்தியில் அச்சம் தேவையில்லை என்று கூறியுள்ளனர்.