சுனாமி: தன்னுயிரை பொருட்படுத்தாது 500 பேரைக் காப்பாற்றிய மீரா
சென்னை:
சுனாமி அலைகளின் கோரப் பிடியில் சிக்கித் தத்தளித்த போதும், தனது உயிரைப் பொருட்படுத்தாமல் 500 பேரை காப்பாற்றியமீராவுக்கு, இந்த ஆண்டுக்கான தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருது கிடைத்துள்ளது.
தமிழக அரசின் சார்பில் ஆண்டு தோறும் தீரச் செயல் புரியும் பெண்களுக்கு கல்பனா சாவ்லா பெயரில் விருது வழங்கப்படுகிறது.ரூ. 5 லட்சம் ரொக்கம் மற்றும் தங்க முலாம் பூசப்பட்ட ரூ.5000 மதிப்புள்ள தங்கப் பதக்கம் ஆகியவையும் இந்த விருதில்அடக்கம்.
இந்த ஆண்டுக்கான விருது கடலூர் மாவட்டம் சாமியார்ப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த ஆர்.மீரா என்ற பெண்மணிக்குவழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை சென்னையில் நடந்த சுதந்திர தின விழாவின்போது மீராவுக்கு வழங்கி கெளரவித்தார்.
கல்பனா சாவ்லா விருதுக்கு முற்றிலும் பொருத்தமானவர் மீரா. காரணம் அவர் செய்த காரியம், அத்தனை பெரியது. கடந்தஆண்டு டிசம்பர் 26ம் தேதி தமிழக கடலோர பகுதிகளை சுனாமி அலைகள் தாக்கி சீரழித்தன. அப்படிச் சீரழிந்த பகுதிகளில் ஒன்றுகடலூர் மாவட்டம்.
சாமியார்ப்பேட்டை கிராமமும் சுனாமி தாக்குதலில் சிக்கி உருக்குலைந்தது. அலைகளின் கோரப் பிடியில் சிக்கியவர்களில்மீராவும் ஒருவர். ஆனால் தனது உயிரைப் பொருட்படுத்தாமல், தான் மட்டும் தப்பிக்க வேண்டும் என்று நினைக்காமல்,தன்னைப் போல் கடல் அலையில் சிக்கித் தவித்த 500 பேரை மீட்டுக் காப்பாற்றி கரை சேர்த்தார். தானும் தப்பித்தார்.
இவரது துணிச்சலான செயல் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ககந்தீப் சிங் பேடி தமிழக அரசுக்கு தெரிவித்து கல்பனா சாவ்லாவிருதுக்கு பரிந்துரைத்திருந்தார். மீராவின் தீரச் செயலைப் பாராட்டும் விதமாக அவருக்கு கல்பனா சாவ்லா விருதை அளித்துகெளரவித்துள்ளது அரசு.
கல்பனா சாவ்லா விருது கிடைத்துள்ளது குறித்து மீரா கூறுகையில், நான் சாதாரண மீனவ குடும்பத்தைச் சேர்ந்தவள். எனதுகணவர் மீனவர். ஆனால் உடல் நலமின்றி வீட்டில் தான் இருக்கிறார்.
சுனாமி அலைகள் எனது கிராமத்தைத் தாக்கியபோது, நான் மிகவும் பதறிப் போனேன். எனது கிராமத்தினர் என் கண்முன்பாகவே அலையில் சிக்கித் தவிப்பதைப் பார்த்தும் பொறுக்க முடியாமல் அவர்களை மீட்கும் முயற்சியில் இறங்கினேன்.
அந்த சமயத்தில் எனக்கு எனது உயிர் குறித்துப் பயமே இல்லை. மிகவும் துணிச்சலாக செயல்பட்டு பலரது உயிரைக்காப்பாற்றினேன். அசாத்திய துணிச்சலுடன் நான் செயல்பட்டதால் 500 பேருடைய உயிரை என்னால் காப்பாற்ற முடிந்தது.
இயற்கைச் சீற்றம் ஏற்பட்டால் எப்படி தப்பிப்பது, மற்றவர்களைக் காப்பாற்றுவது என்பது குறித்து நான் ஏற்கனவே பயிற்சிஎடுத்துக் கொண்டது அந்த சமயத்தில் எனக்கு பெரும் உதவியாக இருந்தது.
ஒரு வீட்டின் இரும்பு கேட்டை உறுதியாகப் பிடித்துக் கொண்டு மற்றவர்களைக் காப்பாற்றி அங்கிருந்து அப்புறப்படுத்தினேன்.எனக்கு விருது கிடைக்கும் என்பதற்காக நான் அதை செய்யவில்லை. விருது கிடைத்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளேன்.முதல்வர் கையால் விருதைப் பெற்றதை மறக்க மாட்டேன் .
எனக்குக் கிடைத்துள்ள பரிசுப் பணத்தை வைத்து எனது மகளை நல்ல படிப்பு படிக்க வைப்பேன் என்றார் மீரா.












Click it and Unblock the Notifications