நீதிபதியை அவமதித்த இன்ஸ்பெக்டர் கைது
திண்டுக்கல்:
மாஜிஸ்திரேட்டை அவமரியாதையாக நடத்திய இன்ஸ்பெக்டரை கைது செய்ய திண்டுக்கல் மாவட்ட செஷன்ஸ் நீதிபதி உத்தரவிட்டார்.
ஆரோக்கியசாமி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சுப்பையா என்பவரை திண்டுக்கல் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி கடந்த 5ம் தேதிகைது செய்தார். காவல் நிலையத்தில் சுப்பையா சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது.இதுகுறித்து சுப்பையாவின் மகன் திண்டுக்கல் மாவட்ட மனித உரிமை ஆணையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து இதுதொடர்பாகதிண்டுக்கல் விரைவு நீதிமன்றத்திற்குப் புகார் அனுப்பப்பட்டது. புகாரைப் பரிசீலித்த நீதிபதி மனோகரன், குற்றவியல் நீதிபதி ஜான்மினோவை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்குச் சென்று உண்மை நிலையை அறிந்து அறிக்கை தருமாறு பணித்தார்.
இதன்படி செப்டம்பர் 10ம் தேதி ஜான் மினோ காவல் நிலையத்திற்குச் சென்றார். அப்போது இனஸ்பெக்டர் பழனிச்சாமி அங்கு இல்லை.இதையடுத்து சுப்பையா கைது செய்யப்பட்டது தொடர்பான ஆவணங்களை அவர் சரிபார்த்தார். வழக்கு தொடர்பான கேஸ் டைரியைஅவர் பார்த்துக் கொண்டிருந்தபோது, இன்ஸ்பெக்டர் அங்கு வந்தார்.
நீதிபதியைப் பார்த்ததும் கோபமடைந்த இன்ஸ்பெக்டர், அவரது கையில் இருந்த டைரியை வேகமாக பறித்து அதில் இருந்த சுப்பையாதொடர்பான பக்கங்களை கிழித்து எறிந்தார். நீதிபதியையும் அவமரியாதையாக பேசியுள்ளார்.
இதைத் தொடர்ந்து அங்கிருந்து வெளியேறிய நீதிபதி ஜான் மினோ இதுகுறித்து மாவட்ட அமர்வு நீதிபதியிடம் புகார் கொடுத்தார். இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிபதி கற்பூரசுந்தரம் உத்தரவிட்டார்.
அதன்படி இன்ஸ்பெக்டர் நீதிமன்றத்தில் ஆஜரானார். குற்றவியல் நீதிபதி ஜான் மினோவிடம் அடாவடியாக நடந்து கொண்டதற்காகஇன்ஸ்பெக்டரை கடுமையாக கண்டித்த நீதிபதி கற்பூர சுந்தரம், அவரைக் கைது செய்யுமாறு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து ஜாமீன்கோரி இன்ஸ்பெக்டர் உடனடியாகமனு செய்தார்.
அந்த மனுவை ஏற்ற நீதிபதி அவருக்கு ஜாமீன் அளித்தார். பின்னர் வருகிற 27ம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றுஉத்தரவிட்டார். மேலும் இன்ஸ்பெக்டர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர்மீது வழக்குப் பதிவு செய்யவும் நீதிபதி கற்பூர சுந்தரம் உத்தரவிட்டார்.
இன்ஸ்பெக்டரை மன்னித்து விட்டுவிடுமாறு 2 டி.எஸ்.பிக்கள் நீதிபதியிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் அவர்களது கோரிக்கையைநீதிபதி நிராகரித்து விட்டார்.