ஊதிய உயர்வில் அதிருப்தி: மின் வாரிய ஊழியர்கள் இன்று ஸ்டிரைக்
சென்னை:
தமிழக அரசு அளித்துள்ள ஊதிய உயர்வு போதாது என்று கூறி தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர்களில் ஒரு பிரிவினர் இன்றுஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மின்வாரிய ஊழியர்களுக்கு தமிழக அரசு புதிய ஊதிய விகிதத்தை அறிவித்துள்ளது. இதன்படி அவர்களுக்கு ரூ. 600 முதல் ரூ.2,235 வரை ஊதிய உயர்வு கிடைக்கும்.இருப்பினும் இந்த ஊதிய விகிதம் மிகவும் குறைவாக உள்ளதாக திமுக தொழிற்சங்கமான மின் கழகத் தொழிலாளர்முன்னேற்றசங்கம், சிஐடியூவைச் சேர்ந்த தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு ஆகியவை அதிருப்தி தெரிவித்துள்ளன.
இந்த இரண்டு அமைப்புகளும் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் இன்று காலை 6 மணியிலிருந்து நாளை காலை 6 மணி வரை வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படும் இந்த இரு சங்கங்களும் அறிவித்துள்ளன.
அனைத்து மின் அலுவலகங்கள் முன்பும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவும் இவை முடிவு செய்துள்ளன.
அதேசமயம், புதிய ஊதிய விகித ஒப்பந்தத்தை ஏஐடியூசி வரவேற்றுள்ளது.