பிகார் தேர்தல்: 45% வாக்குப் பதிவு
பாட்னா:
பிகார் சட்டமன்றத்துக்கு இன்று பலத்த பாதுகாப்புக்கு இடையே முதல் கட்ட வாக்குப் பதிவு நடந்தது. மொத்தமுள்ள 243தொகுதிகளில் 57 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடந்தது. இதில் 45 சதவீதம் அளவுக்கு வாக்குகள் பதிவாகியுள்ளன.
6 மாதங்களுக்கு முன் நடந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காததாலும், ராம்விலாஸ் பாஸ்வானின்கட்சி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைக்க பாஜக கூட்டணி முயன்றதாலும் சட்டமன்றம் கலைக்கப்பட்டது.இதையடுத்து ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக இப்போது மீண்டும் தேர்தல் நடக்கிறது. 57 தொகுதிகளில் சுமார் 1.23 கோடிவாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்ற இந்த முதல் கட்டத் தேர்தலில் 541 பேர் போட்டியில் இருந்தனர்.
மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களைக் கொண்டு இந்தத் தேர்தல் நடத்தப்படுகிறது. நக்ஸலைட்டுகள் நடமாட்டம் மிக்கபகுதிகளில் இந்தத் தேர்தல் நடப்பதால் மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. தேர்தல் பாதுகாப்புக்கு விமானப்படையின் உதவி நாடப்பட்டது இதுவே முதல் முறையாகும். அந்த அளவுக்கு பிகாரில் சட்டம் ஒழுங்கு நாறிக் கிடக்கிறது.
பாதுகாப்புப் பணியில் சுமார் 1 லட்சம் போலீசாரும் மத்தியப் படையினரும் ஈடுபடுத்தப்பட்டனர்.
பலத்த பாதுகாப்பு காரணமாக தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது.
அடுத்த கட்ட தேர்தல் வரும் 26ம் தேதியும், மூன்றாவது கட்டத் தேர்தல் நவம்பர் 13ம் தேதியும், கடைசி கட்டமாக 4வது கட்டத்தேர்தல் நவம்பர் 19ம் தேதியும் நடக்கிறது. பாதுகாப்பை கருத்தில் கொண்டு 4 கட்டமாக தேர்தல் நடக்கிறது.
வாக்கு எண்ணிக்கை நவம்பர் 22ம் தேதி நடக்கும்.
இந்தத் தேர்தலில் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவரின் ராஷ்ட்ரீய ஜனதா தளம்-காங்கிரஸ்- இடதுசாரிகள் ஒருகூட்டணியாகவும், ரசாயனத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜன் சக்தி தனியாகவும், பாஜக-ஐக்கிய ஜனதாதளம் ஒரு அணியாகவும் போட்டியிடுகின்றன.
கடந்த முறை பாஸ்வான் சுமார் 30 இடங்களில் வென்றதால் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. லாலுவையோ,பாஜகவையோ ஆதரிக்க அவர் மறுத்துவிட்டதால் யாராலும் ஆட்சி அமைக்கவும் முடியாமல் போனது.
இந்த முறையும் அதே போன்ற ஒரு முடிவே ஏற்படும் என பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications