திமுகவில் இணைந்த சுயேச்சை எம்எல்ஏ அப்பாவு
சென்னை:
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டசபைத் தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. அப்பாவு, திடீரென திமுகவில் இணைந்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அப்பாவு, மூப்பனார் தமிழ் மாநில காங்கிரஸைத் தொடங்கியபோது அதில் இணைந்தார்.கடந்த 2001ம் ஆண்டு தேர்தலில் அப்பாவு ராதாபுரம் தொகுதியில் போட்டியிட விரும்பினார். ஆனால் தமாகா-அதிமுககூட்டணியில் இடம்பெற்றிருந்த பாமகவுக்கு ராதாபுரம் ஒதுக்கப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பாவு, சுயேச்சையாகப் போட்டியிட்டு பெருவாரியான ஓட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றார்.
இந் நிலையில் தமாகா, மீண்டும் காங்கிரஸில் இணைந்தது. ஆனால் அப்பாவு காங்கிரஸில் சேரவில்லை. மாறாக அதிமுகவுக்குஆதரவாக செயல்பட்டு வந்தார்.
சட்டசபையிலும், ராதாபுரம் தொகுதியிலும், மக்கள் பிரச்சினைகளுக்காக அதிக அளவில் குரல் கொடுத்துள்ளார் அப்பாவு.தொகுதியிலும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தொகுதி மக்களால் நெருங்கக் கூடிய சாதாரண மனிதர் என்ற பெயர் அப்பாவுக்கு உண்டு. ஜெயலலிதாவின் அன்பையும் அவர்பெற்றிருந்தார்.
ஆனால், தனது தொகுதியில் மணல் கொள்ளையில் அதிமுக தலைமைக்கு வேண்டிய சிலர் ஈடுபடவே அதை எதிர்த்தார். இதனால்அதிமுக தலைமைக்கும் அப்பாவுக்கும் இடையே பிரச்சனை உருவானது.
இரு முறை வெவ்வேறு வழக்குகளில் அப்பாவு கைது செய்யப்பட்டார். போலீசாரின் டார்ச்சர் தொடர ஆரம்பித்தது.
இந் நிலையில் சென்னைக்கு வந்த அப்பாவு, திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து அவர் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதியை சந்தித்து, கட்சியில் அப்பாவு இணைந்தபோது, பொதுச் செயலாளர் அன்பழகன்,பொருளாளர் ஆற்காடு வீராசாமி, துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோரும் உடனிருந்தனர்.
கடந்த சில காலமாகவே திமுகவில் சேருவது குறித்து ஸ்டாலினுடன் அப்பாவு பேசி வந்ததாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications